Dec 26, 2012

இழிகுலத்தைப் பெற்றெடுக்க?


ஏ  தமிழ்ச் சாதியே 
இன்னும் என்ன உறக்கம் 
உன் பிஞ்சு மழழைகளின் 
கொஞ்சும் மொழியில் 
நான் இல்லை?

என்னால் உலகம் தலை நிமிர 
உன்னால் நானோ தலை குனிய 
அன்றே சொன்னான் ஒருவன் 
"மெல்லத் தமிழ் இனிச் சாகும்" மென
அடுத்து வந்த 'பாரதி', அவனை 
'பேதை உரைத்தான்' என்றான்!
இருவரும் எந்தன் பிள்ளைகள்தான்...
ஒருவன் வெந்து சொன்னான்;
மற்றவன் நொந்து சொன்னான்;

ஆனால், 
இன்றோ இயன்றவரை என்னை 
இயம்புவது தவிர்க்கின்றீர்?
நாணிக் கோணி நுனி 
நாக்கில் ஆங்கிலம் பேசி 
நாளும் உறவை வளர்க்கின்றீர்;
என்ன தவம் செய்தனை நான்?
இப்படி ஒரு இழிகுலத்தைப் 
பெற்றெடுக்க?

தாத்தன்; பாட்டன்; முப்பாட்டன்;
கட்டிக்காத்த பண்புகளை 
காற்றோடு விட்டு 
சுவாசத்தைத் தேடும் 
சுயநலமே!
நீ கருவாய்; உருவாய்;
உணர்வாய்; உளவாய்;
மாண்பாய்; மதியாய்;
பண்பாய் ; பரிவாய்;
கற்ற; பெற்ற;உற்ற 
அத்தனையும் என்னுள் உளது 
என்பதனை எப்போது 
அறிவாய்?
உன்னால் நான் வாழ்கின்றேன் 
எனும் இறுமாப்பை விட்டொழி;

ஆயிரம்; ஆயிரம் ஆண்டுகள் 
இன்னும் நானும் வாழ்கின்றேன்
இனியும் நானும் வாழ்ந்திடுவேன்;
உன்னைபோன்ற அறிவிலிகாள் 
எந்தன் பிள்ளை எனமாட்டேன்;
மாண்டு போகும் நீயே 
மண்ணில் வாழும்போது 
மாண்புகள் பெற்ற எனைப் 
போற்ற இன்னும் ஆயிரம்
பாரதியும்; இளங்கோவும்;
வள்ளுவனும்; 
பிறந்தும்; இறந்தும் 
பிறப்பார்கள்;
புவியினில் என்னால் 
புகழீட்டி மானுடம் 
போற்ற வாழ்ந்திடவே!

இனி நான் கூறுவேன் 
தமிழினமே!

இருசாதியுண்டு தமிழுலகில் 
என்னைப் போற்றும் ஒரு சாதி 
அதுவே இனிமேல் என் சாதி!
தன்னைப் போற்றும் ஒருசாதி 
அதுவே இனிமேல் மறு சாதி!
தரங்கெட்ட இனத்தின் 
தலை சாதி!!

'தமிழ் இனி' என 
குறும்படம் எடுத்த 
என்பிள்ளைகள்; 
கலங்காதீர்......
என்னை அழிக்க விடமாட்டேன்;
என்றும் உன்போல் சிலரிருக்க;
வாழ்த்துச் சொல்லி 
வளர்கின்றேன்!!! 
வாழி என்சாதியென்று!!!    

Dec 24, 2012

உலகமறியாத சிறுபிள்ளை நான்!

உலகமறியாத சிறுபிள்ளை நான்
உன்னைச் சேர்ந்திட்ட ஒருபிள்ளை தான்
என்னைக் கரைசேரும் குருவல்லவா
ஏதுமறியாயோ என்குருநாத கேள்;

உலகமறியாத சிறுபிள்ளை நான்!

அன்புசெய்கின்றேன் உலகத்திலே அந்த
அன்பே அறியாதோர் பலரிருக்க இங்கு
அன்பே தவமென்று அறிவுறுத்தும் உன்
அன்பால் நிலைக்கின்றேன் நானென்றுமே!

உலகமறியாத சிறுபிள்ளை நான்!

வஞ்சம் சூழ்ச்சியோடு வாவென்ற ழைகின்றார்
கொஞ்சும் மழழையாய் தவிக்கின் றேனுந்தன் 
தஞ்சமன்றி யுயிர்காக்க எவருளர் இவ்வுலகத்தில்
நெஞ்சம்வந்து எனைக்காத்திடவே வருவாய்!

உலகமறியாத சிறுபிள்ளை நான்!


எண்ணக்கலத்தி லுந்தன்நாம மன்றியேது மறிகிலேனே 
வண்ணக்கோல மல்லவாழ்க்கை என்றுணர்ந்தே நின்னைச் 
சரணடைந்தே னெந்தன்பிழை பொறுத்துக் காத்திடப்பா
கருணாகர மூர்த்திகடைக் கண்ணாலே பார்த்திடப்பா....

உலகமறியாத சிறுபிள்ளை நான்!

"ஓம் நமோ நாராயணா"


அரங்கன் வாழுகின்ற ரங்கமே 
திருவரங்கன் வாழுகின்ற திருவரங்கமே 
தினமும் தொழுவோர்க்குத் திருவருள் தரும் 
அரங்கன் வாழுகின்ற ரங்கமே!

ஏகாதசியன்று விரதமிருந்து  ஒருமனதோ டவன் 
எட்டெழுத்து மந்திரமாம் "ஓம் நமோ நாராயணா" என 
ஓதுமன் பருக்கே வேண்டுவன வழங்கிடுவான் 
ஒன்று மறியாத குழந்தைபோல் நின்றிடுவான்!

நாலாறு ஏகாதசி விரதத்தின் மகிமையினை 
ஒருநாள் ஏகாதசி தருமந்தத் திருநாளாம் 
வைகுண்ட ஏகாதசி நன்னாளா மின்று 
வைகுந்தன் தரிசனமே கண்டிடுவார்! 

வாமன னருள்வேண்டு மாந்தரும்  பெற்றிடுவார் 
வானவர் போற்றிடுமென் பரந்தாமனின் பாதமே 
பரமபத வாசலில் நின்றிடுவ ரந்தரன்கனின் 
தரிசனத்தைக் கண்டிடவே இந்நாளில் அரங்கத்திலே!

அரங்கன் வாழுகின்ற ரங்கமே 
திருவரங்கன் வாழுகின்ற திருவரங்கமே 
தினமும் தொழுவோர்க்குத் திருவருள் தரும் 
அரங்கன் வாழுகின்ற ரங்கமே!

Dec 19, 2012

மந்திரத்தை எமக்களியும்!

மனமென்னும் எந்திரத்தை
மாத்திரத்தில் இயக்குமந்த
மந்திரத்தை எமக்களியும்
மன்றாடிக் கேட்கின்றோம்!

உருவெடுக்கும் சிந்தையெல்லாம்
உயர்வான பொருளாம்
உன்னெறி பற்றும்
உருப்பெற்று நற்கதியருளட்டும்!!

ஜோதியிலே சேர்ந்தஒளி
காணுதற்கு அரியதொன்று
ஆதியந்தம் அற்றதது
ஆனந்தம் அளித்திடுமே!!!

வேண்டுவது கொடுத்திடுவாய்
வேண்டுமந்த மாந்தருக்கே
போதுமென்ற மனமென்றும்
பூரிப்பாய் வாழ்ந்திடவே!!!!

ஜகத்தினையே வென்றிடலாம்!

உன் திருநாமமல்லால் வேறேதுமில்லை இங்கே
என் மனவேண்டுதல் கேட்டருள குருநாதா
இப்பிறவியில் யான்செய்த பாவமேது தெரியாதே
எப்பிறவியிலும் உந்தன் பாதமே சரணமய்யா!

காஞ்சிநகர் அலங்கரிக்கும் காமகோடி பீடமது
வாஞ்சையுடன் வருவோரை வரவேற்கும் பீடமது
என்னகுறை சொல்லுமுன்னே தீர்க்குமொரு பீடமது
மன்னவராய் வீற்றிருக்கும் மகானுறை பீடமது

மதங்களைத் தாண்டிவரும் மக்களைக் கண்டிடுவீர்
மகாபெரியவ தரிசனத்திற்கு ஏங்குகின்ற கூட்டமது
புண்ணியங்கள் சேர்த்திடுவார் கருணாகர முகம்பார்த்து
எண்ணியவை கிட்டிவிட்ட மகிழ்ச்சியிலே திளைத்திடுவர்

இறையருளும் குருவருளும் நிறைந்தந்த இடந்தனிலே
மறைகளுமே ஓதுகின்ற மங்களங்கள் முழங்குகின்ற
வானவரும் வாழ்த்துகின்ற வளங்களெல்லாம் தருகின்ற
என்னருமை இடமாமே காஞ்சிநகர் சென்றிடுவோம்!!

ஜகத்குருவை கண்டிடலாம்! ஜகத்தினையே வென்றிடலாம்!
ஜெய ஜெய சங்கர; ஹர ஹர சங்கர!
ஜெய ஜெய சங்கர; ஹர ஹர சங்கர!
ஜெய ஜெய சங்கர; ஹர ஹர சங்கர!

Dec 18, 2012

பண்டிட் ரவிசங்கர்ஜி நினைவாக;

வங்கத்தின் ஓடி வந்த 
இசையின் மிகையால் 
மையத்துநாடு மட்டுமல்லால் 
எங்கெங்கு காற்று புகுமோ 
அங்கெல்லாம் பரவியது 
உன் இசையென்னும் இனிய ராகம்.....

பண்ணும் இசையெல்லாம் 
மின்னும் உன் கரம் பட்டால்;
சிதார் உன் கரங்களால் 
கிறங்கடித்த உள்ளங்கள் 
இன்று சிந்தை கலங்கி 
இருக்கின்றன.....

இறப்பே உன் இருப்பை 
உறுதி செய்ய 
வீணையை விண்ணுக்கு 
அழைத்தாயோ?

இந்த மண்ணில் 
இசைகேட்கும் மனிதன் 
இருக்கும்வரை 
பண்டிட் ரவிசங்கர்ஜி 
பல்லாண்டு வாழ்ந்திடுவார்!
பலரும் அவர் புகழ் பாட!!

Dec 15, 2012

இதயம் துடிக்கிறது; இளம்பிஞ்சுகளை நினைத்து!


கனெக்டிக்கட் (Connecticut, US) டில் நடந்த 
கொடுமை இது!

பள்ளிக் குழந்தைகள் 
பலிகடாவாகி இருக்கின்றன....
பாவியின் கைகளில் 
பதைக்க வைக்கும் துப்பாக்கி
மனித உரிமைகள் பேசும் 
மண்ணில் மாண்டுபோன 
ழைகள்!

தன்னிலை மறந்த ஒருவன் 
தாயையும் கொன்று 
தனயனையும் கொன்று 
தானும் மாண்டுள்ளான்?

இரத்தபந்தம் அறியாதவன் 
இரத்தத்தை குடித்து 
இருக்கிறான்!

இதயம் துடிக்கிறது;
இளம்பிஞ்சுகளை நினைத்து!

என்ன பாவம் செய்தன?
எவனோ ஒருவன் சட்டெனச் 
சுடுவதற்கு?

குடும்ப உறவுகளின் 
மகத்துவம் அறிந்திருந்தால் 
குருதி சிந்தி இருக்காது!

அன்னையின் அரவணைப்பும் 
தந்தையின் அறிவணைப்பும் 
சுற்றங்களின் சூழணைப்பும் 
சரியாக அமையாதவனால் 
ஏற்படும் பேரழிவிற்கு 
எடுத்துக்காட்டு இச்சம்பவம்!

அரும்புகளின் பெற்றோரே 
ஆறுதலற்று நிற்கின்ற,
உங்களை எப்படிச்  சொல்லித் 
தேற்றுவது?

எல்லோருக்கும் விடிந்தது 
இவர்களுக்கு இடிந்தது.....

இறைவா, 
இந்த பெற்றோருக்கு 
இதயத்தில் பலத்தையும் 
இனியொரு வாழ்க்கைக்கு 
வளத்தையும் கொடு!!!

ஆழ்மனதிலிருந்து வரும் 
ஆற்றாத துயரத்தை 
விழிகளின் நீராக 
விதைப்பதைத் தவிர, 
யான் வேறொன்றும் அறிகிலேன்!
என் அஞ்சலியைச் செலுத்த
இந்த இளந்தளிர்களுக்கு!!!

Dec 13, 2012

புதுக்குறள் - 11

புதிதாகச் சிந்தித்தேன்...திருக்குறள் வடிவில்;

கல்வியைத் தேடித்தனி யார்முன் போவானேன்
கருத்தா லரசுசெய்யுங் கால்.

விளக்கம்:

அரசாங்கம் நல்ல தரமான கல்வியைக் குழந்தைகளுக்கு அளித்தால், தனியார் கல்விக் கூடங்களுக்கு போகவேண்டிய அவசியம் இருக்காது.  இந்த அவலநிலை மாற, ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும்.

Dec 12, 2012

மானுடம் பெற்ற வரம்!

பாரதி.....

சலாம் போடும் அடிமைகளை,
சமூக அவலங்களை,
பெண்ணியம் எதிர்க்கும்  கோழைகளை,
பண்பாட்டைக் குலைக்கும் சதிகளை,
ஏய்த்துப் பிழைக்கும் வர்க்கங்களை,
ஏகாதிபத்திய அரசுகளை,
 
சுட்டெரிக்கும் நெருப்பு 
சுழலும் சூறாவளி 
பாயும் காட்டாறு
பணியா மாவீரன் 
எழுத்தால் போராடும் 
ஏவுகணை இவன்!!

இவன் பிறந்தது 
இம்மண்ணின் தவமன்று 
மானுடம் பெற்ற வரம்!

ஏனெனில், மனிதன் மட்டும்தான் 
இயற்க்கைக்கு போட்டியாக 
இணைப்புக்கு அடங்காத 
எல்லாம் என்னால்தான் 
என மார்தட்டும் பேதையாக 
போதையில் இருப்பவன்!

சிந்தையைத் தெளிவிக்க 
சிங்கமாய் வந்தவன்தான் 
எட்டயபுரம் தந்த 
பாட்டுடைத் தலைவனவன்!
தமிழெனும் வாள் கொண்டு 
தரணியில் போர் தொடுக்கும் 
தகைச்சார்ப் புலவனவன்!
தன்னிகரில்லை என என்றும் 
மண்ணில் புழுகுகின்ற 
மாந்தருக்கிடையே தான் 
மானமிகு பாரதியும் 
வாழ்ந்தான் எனும்போது 
வாழ்க்கையே இலட்சியமாகிறது!

இந்நூற்றாண்டில்,

இவன் போல் எவர் வாழ்ந்தார்?
இவன் போல் எவர் மடிந்தார்?
வரலாறு கேட்கிறது... 
வாய்மூடி நிற்கிறது தமிழ்....

நேற்றைய நன்னாளில் 
நயமிகு புகழ் பாடிய 
அத்துணை உள்ளங்களுக்கும் 
அடியேனின் வந்தனங்கள்!!
இதுபோல் என்றென்றும் 
அவன் புகழ் பாடிடுவோம் 
அவனியில் மானுடம் 
அழியாப் புகழ் எய்திடவே....

புதுக்குறள் - 10

பொதிசுமக் கும்கல்வி வேண்டாமே யென்றும்நம் 
மதிபயக்கும் நிலைபோதும் நன்று.

விளக்கம்:

இன்றைய கல்விச் சாலைகளுக்கு போகும் நம் குழந்தைகள் பொதிகள் சுமப்பது போல அடுக்கடுக்காய் புத்தகங்களைச் சுமக்கிறார்கள்.  அதை விடுத்து, நம் அறிவைக்  கூட்டுகின்ற நிலையில், தெளிவான கல்வி இருத்தலே நன்மை பயக்கக் கூடியது.

புதுக்குறள் - 9


வியாபாரச் சந்தையில் கல்வி வந்ததுகாண் 
சேதாரமே ழையின்தலை யில்.



விளக்கம்:


கல்வி என்பது சேவை என்பதொழிந்து, எப்பொழுது வணிகமாக மாறி சந்தைக்கு வந்ததோ, அன்று முதல் ஏழைகளுக்கு எட்டாத கனியாக, மிகுந்த சேதாரத்தை ஏற்படுத்தியுள்ளது.  வாயையும், வயிற்றையும் கட்டித் தன் பிள்ளைகளுக்கு தரமான கல்வி கொடுக்கப் படாத பாடு படுகின்றனர்.

Dec 11, 2012

M S

M S
இந்த இரண்டெழுத்து
இதயங்களை வருடாத
நாட்களே இல்லை...

குயிலும் தமிழும்
செய்த தவம்;
ஒரு இசைக் குயிலாக
ஒவ்வொரு இந்தியனையும்
கட்டிபோட்ட குரல்!

ஆலயங்களில்....
ஆண்டவன் சந்நிதியில்,
திருப்பள்ளி எழுச்சியே....
திருமகளின் குரல் தான்
என்றால் மிகையாகாது.....

எத்தனை எத்தனை
கீர்த்தனைகள்...
தெய்வீக கானங்கள்...
தேவ மந்திரங்கள் .....
உன் குரலால்
உச்சரிக்கப்பட்டு
உயிர் பெற்றன.....

நீ
குறை ஒன்றும் இல்லை பாடினால்
குதூகலித்து வருவான் வேங்கடன்.
உன் சுப்ரபாதத்தில் தான் இன்றும்
துயிழெழுகிறான் அந்த அரங்கன்!

நீயோ நீங்காத்துயில் கொண்ட நாள் இது!
(இன்று M S நினைவு நாள்)

Dec 10, 2012

புதுக்குறள் - 8


கற்றார் மற்றொரு வர்க்குகல்வி புகட்டின் 
கல்லாமை இருள் அகலும்.                                              

விளக்கம்:

கற்றவர்கள் குறைந்த பட்சம் ஒரு கல்லாதவருக்காவது கல்வி அறிவு ஏற்படுத்தினால், நாட்டில் கல்லாமை எனும் இருள் அகன்று, கல்வி அறிவில் முழுமை பெறலாம்.

Dec 9, 2012

புதுக்குறள் - 7

நினைத்து உண்ணலும் துரிதன தவிர்த்தலும் 
நீண்ட ஆயுள் தரும்.                                              

விளக்கம்:

உணவு அருந்தும்போது நம்முடைய சிந்தனை உயிரின் ஆதாரமான உணவைப் பற்றிமட்டுமே இருத்தல் அவசியம்.  அப்பொழுதுதான் அந்த உணவானது நமக்குத் தேவையான சக்தியைக் கொடுக்கும்.  துரித உணவு வகைகளை நாம் அறவே தவிர்த்தல் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது . இவ்விரண்டு செயல்களும், நாம் நீண்ட நாட்கள் உயிர் வாழத் துணை நிற்கும்.

புதுக்குறள் - 6

மக்குமக்காக் குப்பை பிரித்திடில் ஈட்டும் 
மண்ணில் பயனுற செயல்.                                              

விளக்கம்:

அன்றாடம் சேருகின்ற கழிவுப் பொருள்களை மக்கும் (Biodegradable)  மற்றும் மக்காக் கழிவுகளாக (Non-biodegradable) இனம் பிரித்து போடுவோமேயானால், அதன் மூலம் இந்த மண்ணில் நாம் பெறக்கூடிய பயன்கள் எண்ணற்றவையாகும்.  மின்சாரம், எரிசக்தி போன்ற செயல்களுக்கு ஏற்றதாக அமையும்.   முக்கியமாக நோய்  பரவுவதைத் தடுக்கும்.

Nov 30, 2012

புதுக்குறள் - 5

சுருக்கின் மின்சாரம் இயற்க்கை ஒளிபற்றின் 
பெருக்கின் ஆற்றல் உயிர்க்கு.
     


விளக்கம்:
மின்சாரத்தை குறைவாகவும், இயற்கையான ஒளியை மிகுதியாகவும் பயன்படுத்தி, ஓசோனில் மாசு படிவதைத் தவிர்த்தால், உயிரினங்கள் பாதுகாப்பாக வாழ்வதற்குத் தேவையான சக்தியைப்  பெருக்கலாம்.

Nov 29, 2012

புதுக்குறள் - 4

கணினியின் துணைநன்கு அறியும் மாந்தர்க்கு 
கற்றல் எளிதென்று சொல்.                                              

விளக்கம்:
கணினியை நற் செயல்களுக்கு; அறிவை வளர்ப்பதற்கு; ஆற்றலைப் பெருக்குவதற்கு பயன்படுத்தி பழகினோமேயானால், நாம் கற்பதற்கு அதைப் போல உற்ற துணை வேறெதுவும் இல்லை.  கற்பது ஒரு இலகுவான செயலாகும்.

Nov 28, 2012

புதுக்குறள் - 3


புதிதாகச் சிந்தித்தேன்...திருக்குறள் வடிவில்;

புற்றின் வகையறிந்து புறந்தள்ளின் வாழ்க்கை
தொற்றும் நோயும் வரா.                                         
     


விளக்கம்:

புற்று நோயின் அறிகுறிகளை, காரணிகளை ஆராய்ந்து, அவற்றை நாம் புறம் தள்ளி வைப்போமேயானால், நம்முடைய வாழ்க்கையில் அந்நோய் வாராமல் நம்மைக் காத்துகொள்ளலாம்.

Nov 27, 2012

கார்த்திகை தீபம்...

கார்த்திகையின் வரவு கண்டு
கன்னியர்கள் மகிழ்ந்திடுவர்
தீபங்களை ஏற்றிடுவர்
திருநாமம் சொல்லிடுவர் .

துணை வருவோன் எவனென்று
தினம் மனமே அலைபாய ,
பெற்றோரும் நாள் பார்த்து
பெருமையுடன் தேடிடுவார் ;
உற்றதொரு காளையரை
மற்றுமொரு மகனாக ,
மாலை மாற்றிப் பெற்றிடுவர் ;
காலமெல்லாம் போற்றிடுவர்!

கார்த்திகையை வரவேற்போம்;
கன்னியர்களுடன் நாமும்,
பெற்றாரும்,உற்றாரும்,
உற்சாகமாய் வாழ வேண்டி
ஏற்றுமந்த தீபம் தனில் ,
எண்ணமெல்லாம் ஈடேற;
வாழ்த்துக்கள் சொல்லிடுவோம்
வளமுடன் வாழ்க என்று!

Nov 26, 2012

புதுக்குறள் - 2

ஊடகங்களின் உறவில் உணர்ச்சி வித்திட்டால் 
ஊனுமறிவும் சேர்ந்து கெடும்!

விளக்கம்:

நாம் அன்றாடம் தொடர்பில் இருக்கக் கூடிய ஊடகங்களான காணூடகம்(Television; internet,etc.,); கையூடகம்(Phone, mobile, etc.,); செவியூடகம்(radio); போன்ற செய்தித் தொடர்பு ஊடகங்கள், நம் உணர்சிகளை மிகுதிப் படுத்தினால், நம் உடலும், அறிவும் சேர்ந்து கெடும். ஆதலால், நாம் அறிவின் பால் செயல் பட்டு, நம்மைப்  பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

சுவாமியே.....சரணமையப்பா!

ஐயப்பா என்று சொல்லு மனமே
ஐயன் வந்து காத்திடுவான் தினமே
சரணகோஷம் பாடிடுவாய் மனமே
சட்டெனவே வந்திடுவான் தினமே

கார்த்திகையில் மாலையிடு மனமே
காலை மாலை பூஜையிடு தினமே
காரிருளும் போய்விடுமே மனமே
காரியத்தை முடித்து வைப்பான் தினமே

இருமுடியைக் கட்டிடுவோம் மனமே
மறுமுனையில் அவனிருப்பான் தினமே
புறப்படுவோம் சரணம் சொல்லி மனமே
புண்ணியங்கள் சேர்த்திடுவோம் தினமே

பக்தர்களை நாடி வரான் மனமே
பாயும் புலியேறி வரான் தினமே
பம்பையிலே நீந்தி வரான் மனமே
பாதையினைக் காட்ட வரான் தினமே

அழுதாமலை ஏறிவிடு மனமே
அல்லல்களும் தொலைந்திடுமே தினமே
கரிமலையைத் தாண்டிவிடு மனமே
கவலைகளும் பறந்திடுமே தினமே

பதினெட்டு படியேறு மனமே
பதினாறும் பெற்று வாழு தினமே
படிபூஜை செய்திட்டால் மனமே
பாவமெல்லாம் பனியாகும் தினமே

ஐயனைக் கண்டுவிட்டால் மனமே
அகமெல்லாம் மலர்ந்திடுமே தினமே
அபிஷேகம் செய்துவிட்டால் மனமே
ஐயனருள் துணை நிற்கும் தினமே

ஐயப்பா என்று சொல்லு மனமே
ஐயன் வந்து காத்திடுவான் தினமே
சரணகோஷம் பாடிடுவாய் மனமே
சந்ததிகளைக் காத்திடுவான் தினமே

புதுக்குறள் - 1

புதிதாகச் சிந்தித்தேன்...திருக்குறள் வடிவில்;

புரிதலும் கொடுத்தலும் புரிந்தன செய்தலும் 
புவியினில் அமைதிக்கு வழி!                                                        - சுரேஜமீ .


விளக்கம்:
ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளுதலும்; விட்டுக் கொடுத்து வாழ்தலும், புரிந்த வண்ணம் செயலாற்றுதலும், இந்த உலகத்தில் அமைதியாகவும்; மகிழ்ச்சியாகவும் வாழ்வதற்கு வழியாகும்.

Nov 25, 2012

காற்று

மெல்ல வருடும் காற்று
மேனியில் சற்றே நின்று
மேதினியில் நடந்தவற்றைக்
மெதுவாக எடுத்துச் சொன்னது...

அமெரிக்கா  தொடங்கி
ஆஸ்திரேலியா வரை
நான் கடந்து வந்த பாதையில்;
நலிந்தும்; மெலிந்தும்;
பொழிந்தும்; புதைந்தும்;
மறைந்தும்; மீண்டும்;
வந்தேன்....

நறுமணங்களும்;
நச்சுக்களும்;
அடர்ந்த கானகங்களும்;
அரவமற்ற நிலங்களும்;
ஆற்றின் படுகைகளும்;
சேற்றின் செழுமைகளும்;
போற்றி நான்
வந்தேன்...

வாடையாக;
வசந்தமாக;
தென்றலாக;
புயலாக;
தீயாக
சூறாவளியாகச்
சுற்றி வந்தேன்.....

சிலர் என்னால்
நோயுற்றனர்;
பலர் என்னால்
பயனுற்றனர்;
இயற்க்கை என்னை
இயல்பாகத்தான்
இயக்கியது....ஆனால்;
செயற்கை என்னை
சிதறடிக்கச் செய்து;
பலரை பதறடிக்கச்
செய்து விட்டது....

ஆதலால்; கேள்;
அவனியில் நான்

அருமருந்தாய் பரவி வர;
ஆற்றுதல் என்னவென்று,
இதமாகச் சிந்தித்து,
ஈதலின் நன்றாம்; என்
உற்ற துணை உனக்கு,

ஊற்றுப் பெருக்கெடுக்கும்
எந்த இடத்திலும், நான்
ஏற்றம் பெரும் வகையில்;
ஐந்தைந்தாய் மரம் நட்டு;

ஒட்டுமொத்த உலகத்திலும்
ஓசோன் படலத்தை
ஒழுங்காகப் பாதுகாக்கும்
ஒப்பற்ற சேவைக்கு;
என்னையும் நீ தயார்படுத்து;

நோயில்லா வாழ்வுக்கு
நான் உனக்கு உறுதி தர....
செய்வாயா இதையென்று
செவிதனிலே சொல்லிவிட்டு

சென்றதந்த தென்றலும் தான்........

Nov 23, 2012

தடம் பதிக்கிறது

இதயம் சொன்னது 
எண்ணத்தை
உதிர்த்த
உதடுகளிடம்;
நீ தடுமாறுவது
என்னுள்
தடம் பதிக்கிறது என்று!

Nov 21, 2012

"இந்தியனாக" இரு!

இந்துவாக இரு;
இஸ்லாமியராக இரு;
கிறிஸ்துவராக இரு;
ஜைனராக இரு;
சீக்கியராக இரு;
பௌத்தராக இரு;
ஆனால்,
இந்தியாவில்
"இந்தியனாக"
இருக்கக்
கற்றுக்கொள்!

இந்திய மண்ணில்
தீவிரவாதம் செய்யும்
எவனையும்
மதத்தைத் தாண்டி
மனிதனாக எதிர்க்கக்
கற்றுக்கொள்!!

நாடா? மதமா?
என்றால்;
உன் மதத்தைப்
பின்னால் வைத்து;
நாட்டை
முன்னால் வை
க்கக்
கற்றுக்கொள்!!!

வாழ்க பாரதம்! வளர்க இந்திய தேசம்!! ஓங்குக இந்தியன் புகழ்!!!

Nov 19, 2012

ஐ.நா.

இன்றைய நிலையில்

ஐ.நா.
வெறும்
ஐயும்(eye)
நாவும்(tongue )
தான்.....

லே...லே...லே...லே...

சண்முகா என்று சொன்னாலே
சந்தோஷம் தங்கும் வீட்டிலே
சஷ்டியில் விரதம் இருந்தாலே
சத்தியம் வருவான் முன்னாலே

நிந்தனை எவரும் செய்தாலே
நித்தமும் வருந்தித் தவறாலே
பக்தனாய் குமரன் பின்னாலே
பித்தனாய் போவார் முன்னாலே

கந்தனை நம்பி வந்தாலே
சிந்தனை தெளியும் தன்னாலே
எண்திசையும் எதிரிகளில்லே
ஏற்றம் வரும் கண்கள் முன்னாலே

கார்த்திகைப் பெண்கள் அருளாலே
கார்த்திகேயன் வந்தான் பிறப்பாலே
சூரனை வதைத்தான் வேலாலே
சேவலைக் கொண்டான் கொடியாலே

முருகனை வணங்கிச் சென்றாலே
முத்தமிழ் வாழ்த்தும் அவனாலே
அகத்தியன் வளர்த்த தமிழாலே
அர்ச்சனை செய்வோம் முன்னாலே

Nov 13, 2012

வண்ணத்தை மிஞ்சும் வர்ணங்கள்!

குருதியில்
பச்சை உண்டோ?
கருப்பு உண்டோ?
நீலம் உண்டோ?
ஆனால், உனக்கு மட்டும்
ஏதடா
வண்ணத்தை மிஞ்சும்
வர்ணங்கள்?

எவனோ அன்று
பிரித்தாளச் செய்த
சூழ்ச்சியை;
இன்றும் நீ
பிடித்துக் கொண்டு
இருக்கிறாயே
மூடனே!

உன் குருதியி
ன் நிறம்
"ஒன்று" என சொல்லிய
உன் அறிவு;
உனக்குள் எப்படி
விண்வெளி இடைவெளியில்
இப்படி வர்ணத்தை விதைத்தது?

நடந்த தீயவைகளை, 
தலைமுறை; தலைமுறையாக
எடுத்துச் செல்வதைத் தவிர்க்க;

நானிலத்தில் "நாம்" 

எல்லோரும் சமமென்பதற்கு!

Nov 12, 2012

தனிமை

வறுமையினும் கொடிது ;
பகைமையினும் கொடிது ;
நோயினினும் கொடிது ;
வாளினும் வலியது !
வாழ்க்கையை வேரோடும்
வேரடி மண்ணோடும்
அறுத்துவிடும் நஞ்
சு!

சுட்டெரிக்கும் சூரியனே,
சுடர் மறைக்கும் ஒரு நாள்
சேர்ந்திருக்கத் துடிக்கும்!
மதியோனும்; புவியும்
கைகொடுக்கும் அந்நாள்;
கிரஹனம்  எனும் பொன்னாள்!
இதிலிருந்து அறிவோம் நாம்
தனிமை எனும் நஞ்சை!!                               


Nov 11, 2012

பத்ம விபூஷன் திரு. நாராயண் மூர்த்தி அவர்களின் உரை:

பத்ம விபூஷன் திரு. நாராயண் மூர்த்தி அவர்களின் உரை:

மாதத்தில் இருபத்திரெண்டு நாட்கள்;
அயல் நாட்டில்;
எட்டு நாட்கள் என் தாய் நாட்டில்;
இதுதான் எனது இன்றைய நிலை!

இத்தகைய சூழலில்
இந்த குவைத் கன்னட கூட்டா
அமைப்பின் நிகழ்ச்சியில்
"தொழில் முனைவோர்"
என்ற தலைப்பில் பேச
அழைத்திருக்கிறார்கள்!

நண்பர்களே; குறிப்பாக இளையோரே;
தொழில் முனைவோர் எப்படி
ஒரு சமுதாயத்தை மாற்ற முடியும்
என்பதை நாம் உணரவேண்டும்!
தனி நபர் வருமானத்தில்;
உலகத்தில் முதல் பத்து இடத்தில்
இருக்கும் குவைத்துக்கும் கூட
இது பொருந்தும்!!

தனது "முயற்சியை",
குறிக்கோளை, தகுந்த முறையில்
செல்வம் தரும் வகையில் மாற்றி,
வேலை வாய்ப்பை உருவாக்கி,
ஏழ்மையை விரட்டுவோமேயானால்;
அதுதான், நம் வெற்றியின் அடையாளம்!

"முடியாதது" எதுவோ; அதை
"முடியும்" என மாற்றுவதே
உங்களின் முயற்சியின்
இலட்சியமாக இருக்க வேண்டும்!

ஒரு "முயற்சி" வெற்றி பெற
அடிப்படைத் தேவைகள் என்ன?

1.  நீங்கள் கூறுவது எளிமையாக இருத்தல் அவசியம்;
    கட்டுப்பாடுகள் அற்ற, தெளிவான வார்த்தைகளை
    உபயோகிக்க வேண்டும்;

     உங்கள் முயற்சி ஒரு நிறுவனத்தின்
2.  உற்பத்தி செலவை குறைப்பதாகவோ; 

3.  உற்பத்தி சுழற்சியின் நேரத்தை குறைப்பதாகவோ;

4.  சந்தையைப் பெருக்குவதாகவோ;

5.  வாடிக்கையாளரை கவருவதாகவோ;

இருத்தல் அவசியம்! 

இவை நான்குமோ;
இதில் ஏதேனும் ஒன்றோ
உங்கள் முயற்சியில்
இருந்தால்; நிச்சயம் ஒருநாள்
உங்கள் இலட்சியம் வெற்றியடையும்!

உலகில் தொண்ணூற்று ஒன்பது
சதவிகிதத்தினர்; மற்றவர்
முயற்சியை; மெருகூட்டி
வெற்றியடைவதால்; கால
ஓட்டத்தில்; அவர்களால்
நிலைக்க இயலவில்லை!

தன்னுடைய முயற்சி
வெற்றியடைந்ததால்;
General Motors; Microsoft;
Apple; Fed ex போன்ற
நிறுவனங்கள் நிலைத்து
நிற்கின்றன!

உலகின் மாற்றங்களை
உன்னிப்பாய் கவனியுங்கள்;
உலக அளவில் ஏற்பட்ட
நான்கு மாற்றங்கள் தான்;
நான் அன்று வெறும்
250 டாலரில் தொடங்கிய
நிறுவனம் இன்று
26 பில்லியன் டாலர்
நிறுவனமாக உயர்ந்து இருக்கிறது!

முதல் முயற்சி
தோல்வியில் முடிந்தால்
மூலையில் உட்கார்ந்து விடாமல்;
உங்கள் மூளையைத் தீட்டி
காரணம் அறியுங்கள்!

ஒன்று; நீங்கள் உங்கள் முயற்சியை
காலம் தாழ்த்த நேரலாம்!
இல்லையெனில்,
உங்களுக்கான சந்தை
வேறு நாட்டில் இருக்கலாம்!

வெற்றிக்கு இன்றியமையாத
அடுத்த தேவை;

தகுந்த நிபுணர்களை
தன்னகத்தே கொள்ளுதல்;
நிதி; மேலாண்மை;
உற்பத்தி; மனித வளம்
என்று ஒவ்வொரு துறைக்கும்;
ஏற்றவாறு; ஒருமித்த
கருத்துள்ள; நாளைய
இலட்சியத்திற்காக
இன்று தியாகம் செய்யத்
தயாரான; தகுதியான
நபர்களை உங்களுடன்
வைத்திருத்தல் அவசியம்!

இவை அனைத்தும்
இருந்தாலும்; நம்பத் தகுந்த
தலைமையாக தாங்கள் 
இருத்தல் அவசியம்!

தலைமையைப்  பற்றி
ஒன்று சொல்ல விளைகிறேன்!
அமெரிக்காவில்; பெருந்தொழில்
அதிபர்களிடையே;
நான் உரையாடும்போது
என்னிடம் சிறந்த தலைமைப் பண்பைப்
பற்றி பேசச் சொன்னார்கள்;

நான் சொன்னேன்;
நான் அறையில் நுழையும்போது;
என்னால்
ஒரு முகம் மலர்ந்த ஒரு
மகிழ்ச்சியை;
என்னை நம்பி வேலை
செய்யும் சக தொழிலாளர்களிடம்
ஏற்படுத்த முடிந்தால்;

அவர்களுக்கு என்னால்
வாழ்க்கைக்குத் தேவையான
உபரி வருமானத்தைக்
கொடுக்க முடிந்தால்;

நான் ஒரு நல்ல தலைமையாளன்!!
என்று.
 
இவை இருந்து விட்டால்;
இன்றைய காலத்தில்
உங்கள் முயற்சியை
செயல் படுத்த பணம்
உங்களை நாடி வரும்!


ஆதலால்; இளையோரே
தொழில் முனைவோரே;
இன்னல்களைப் பொருட்படுத்தாது
இலட்சியங்களை வென்றெடுக்க
உங்களுக்கு தேவை;

உங்கள் முயற்சி எதாவது ஒரு
மாற்றத்திற்கு வித்திட வேண்டும்!
அதற்கான சந்தை மற்றும் சகாக்கள்;
நல்ல தலைமைப் பண்பு;
உங்களிடம் இருத்தல் வேண்டும்!

வாருங்கள்; வெற்றி நம்
பக்கத்தில்!!!!!!
வரலாறு எழுதும் நம்
பக்கத்தை!!!!!

ஜெய் ஹிந்த்!!!

(Padma Vibooshan Sri.Narayan Murthy's speech at a function organized by Kuwait Kannada Koota on 9th November, 2012)

இனிய நல் தீபாவளி வாழ்த்துக்கள்!!!!!!

தீபம் ஒளிவிட
தீயவை விலகி
நல்லவை நாடி
எண்ணை நீராடி
கங்கையை இருப்பிடத்திற்கே
கொணர்ந்து,
குளியல் செய்து;
புத்தாடை உடுத்தி,
பகவானை வேண்டி,
பட்டாசு வெடித்து
வாழ்த்துக்கள் பரிமாறி,
வழக்கமாகக் கொண்டாடும்
இந்த நரகாசுரன் அழிந்த நாளில்;

இனியும், நம் முன் இருக்கும்,
இன்ன பல அசுரர்களாம்,
அறிவின் எதிரிகள்;
உணர்ச்சியின் உறவுகள்;

அகங்காரம்; ஆளுமை; கர்வம்;
தன் முனைப்பு; பொறாமை;
எதேச்சாதிகாரம்; எள்ளி நகையாடல்;
புறம் பேசுதல்; புண் படுத்தல்;
பெற்றோரை நிந்தித்தல்;
போன்ற அசுரர்களைக் கொன்று;

புதியதோர் உலகம் செய்து;
அகமன் மலர்ந்து;
முகமன் கூறி;
பெற்றார்; உற்றார்; ஊரார்
உலகார் மெச்சும் வகையில்;
உணர்வுகளை;
அறிவின் அடிமைகளாக்கி
சகமனிதன் வலி கண்டால்;
சகதோள்கள் கொடுத்து
சன்மார்க்க நெறி பற்றி
சகோதரத்துவம்  பேணி
இன்னுமொரு தீபாவளிக்கு
நாம் நடைபோடுவோம்
என்று உறுதியெடுப்போம்!!!!!!!!

இனிய நல்  தீபாவளி வாழ்த்துக்கள்!!!!!!

Nov 7, 2012

தமிழா ஏனிந்த தலைகுனிவு?

தென்னகம் பற்றி எரிய
யார் காரணமாயினும்,
"நாம் தமிழர்" எனும்
உணர்வற்று;
சா தீயை வைத்துச்
சடலமாக்கி விட்டனரே
சில அப்பாவி உயிர்களை!
 

உனக்கு வலை விரித்து
உன்னுள் குளிர்காய
நினைக்கும் சதியினை
அறியாயோ?
அவ்வை அன்றே சொன்னாளே
மேதினில் இட்டார் பெரியோர்;
இடாதார் இழிகுலத்தோர் என்று!

சரித்திரம் சொல்கிறது,
சக மனிதன் வலி அறியா
எவனும் தமிழனாக
இருக்கத் தகுதி அற்றவன்!

இந்நிலையில் நீ எப்படி
ஈழத்து சொந்தங்களை
காப்பாற்றுவாய்?

போதும் நிறுத்து;
உன் குருதி
இனியும்
வீணாகக் கூடாது!
சதியை முறியடித்து
சா தீயை வென்றெடு!
நாளைய சரித்திரம்
நமதே!!!!

Nov 6, 2012

விநாயகர் கவசம்

சதுர்த்தியில் மலர்ந்த
சண்முக சோதரா
சதுர்மறை போற்றும்
சிவனுமை  பாலா
தினம்உனைப் பாடி
துதிசெய்து நாளும்
உனதருள் வேண்டி
நிதமுனைப் பணிவோம்.

முன்வினை களைவாய்
மூஷிக வாகனா
என்மனம் இருப்பாய்
ஈசன் புதல்வா
சிந்தையில் கலப்பாய்
சித்தி விநாயகா
உன்பதம் சரணம்
உமையவள் மைந்தா.

ஒன்றுமே அறியேன்
உலகினில் பிறந்தேன்
உன்னடி சேர்ந்தேன்
ஒரு வரம் தருவாய்
நன்று மற்றன்று
நவிலா வண்ணம்
நந்தன விநாயகா
நலமது அருள்வாய்.

இருசெவி என்றும்
இன்பமே உய்க்கும்
நற்செய்தி நாளும்
நயம்படக் கேட்க
இருவிழி காணும்
ஒரு முகக்காட்சி
மங்கல மூர்த்தி
நினதருள் சாட்சி.

நாமகள் நாவினில்
அமர்ந்து அடியேன்
சொல்பொருள் யாவும்
நலமென விளைய
நுகரும் மணமே
நறுமணமாகி,என்
மெய்யது காப்பாய்
கஜமுக கணபதி.

ஐம்புலன் தன்னை
ஐங்கரன் காப்பான்
தினம் ஒருதடவை
மனமது ஒன்றிப்
பாடும் பக்தர்கள்
பாரினில் நற்கதி
பெறுவார் சத்தியம்
பால கணபதியருளால்.

அல்லல்கள் ஓடும்
நல்லவை நாடும்
நவகோள் அருளை
வாரி வழங்கும்
ஒருமுறை உன்னைத்
தொழும்அன்பர் யாவர்க்கும்
ஹேரம்ப கணபதி
அருள்நமைக் காக்கும்!                        -சுரேஜமீ 

Nov 5, 2012

இதுதான் ஐநாவின் நியதி!!!

உரிமைகள் மறுக்கப்படும்போது
உணர்வுகள் மேலோங்குமென்பது
உலக நியதி!!!

ஜனநாயகம் என்பது வெறும்
ஜடனாயகம் ஆகும்போது,
அஹிம்சை என்ன செய்யும்?
அறம்  துறந்தவர்கள்
ஆட்சி செய்தால்?

பல நூற்றாண்டுகள் ஆண்ட சமூகம்
அரை நூற்றாண்டுக்கும் மேல்
அறவழியில் கேட்டார்கள்;
அனுமதி எங்கள் உரிமையை என்று!
ஆண்டோர் எவரும் செவி சாய்க்கவில்லை!

அடுத்து வந்தோர்
ஆயுதம் ஏந்தினர்!
இழந்த உரிமையை
ஈன்றெடுக்க!

உரத்த குரலில்
ஊரே அலறியது!
எதிர்த்து நிற்க
ஏது  துணிச்சல்?

ஐயம் அற்ற மறவன் சொன்னான்;
ஒன்று பட்டால்,
ஓங்கி ஒலிக்கும் நம் சத்தத்தில்;
ஈழம் பிறக்குமென்று!!!

தந்தை செல்வா தொடங்கி
தமயன் பிரபாகரன் வரை
உயிர்பலி கொடுத்தது தான் மிச்சம்!
உரிமையை மீட்டெடுக்கவில்லை!!!

அமெரிக்காவின் நிலையை
ஆர்பரிப்போர் இருக்கும் வரை,
ஆப்ரிக்காவுக்கு நீதி
ஆசியாவிற்கு அநீதி;
இதுதான் ஐநாவின் நியதி!
                    - சுரேஜமீ .

Nov 1, 2012

ஓம் நமோ சந்திர சேகரேந்திர சரஸ்வதியே !!

ஒருநாளும் உன்னை வணங்கும் உத்தமன் நானல்லவே,
இருந்தாலும் எனைக் காக்கும் பரம்பொருள் நீயல்லவா!!

காஞ்சி நகர் வாழும் கருணை உள்ளமே உனைக்
காண்பவர் கரை சேர்வர்; ஊழிப்  பெருங்கடலை
எண்ணக்குவி சேர்ப்பார்; உன் திருநாமம் சொல்லி,
தின்னக்  கூலி உண்டோ? தெவிட்டாத உன்னருளை !  (ஒரு நாளும்)

கடவுளை நானிங்கு கண்டதில்லை உன்னைக்
கண்ட நாள் முதலாய் கடவுளில்லை;
உற்றார், பெற்றாரும் உறவுமில்லை; என்றும்
உன்னடி சேர்ந்தார்க்கு அனைத்தும் நீயே !        (ஒரு நாளும்)

ஆசை எனும் தேரில் ஏறிவிட்டேன்;
மாயை எனும் வலையில் வீழ்ந்து விட்டேன்;
இன்பம் எனும் தூண்டில் கொணர்ந்த இந்த
துன்பச் சுமை தாங்கா, துடிக்கின்றேன்!                (ஒரு நாளும்)


அற்ப வாழ்வினை, நீ அற்புதமாய் மாற்றி
அடியேன் எனை நீயும் ஆதரிப்பாய்;
இனியும் வாழ்நாளில், பிறர்க்கின்னா செய்யாமை
எனைக் காத்து, வாழ்வில் ஒளியேற்றும் என் தெய்வமே!!

ஓம் நமோ சந்திர சேகரேந்திர சரஸ்வதியே !!
ஓம் நமோ சந்திர சேகரேந்திர சரஸ்வதியே !!
ஓம் நமோ சந்திர சேகரேந்திர சரஸ்வதியே !!
ஓம் நமோ சந்திர சேகரேந்திர சரஸ்வதியே !!

ஒருநாளும் உன்னை வணங்கும் உத்தமன் நானல்லவே
இருந்தாலும் எனைக் காக்கும் பரம்பொருள் நீயல்லவா!!!                 -  சுரேஜமீ

Oct 30, 2012

லீனா மணிமேகலை

காற்றும் ஒளியும்
கண்கவர் வானும்
காதில் சொன்னது;
கலையும், கற்பனையும்;
கலந்த கலவை
மேகலை எனும் உருவில்
மண்ணில் உள்ளதென்று!
சற்றே யாரென சிந்தை
செலுத்தி; சிலவரி படித்தேன்;
உன் முகவரி தேடினேன்;
உன்னைப் போல் ஒவ்வொரு
பெண்ணும்; தெளிந்த நீரோடையாய்
திடமான சிந்தனையுடன்
தீர்க்கமான வழி பற்றினால்;
திண்ணமாய்ச் சொல்கிறேன்;
பாரதியும்; பெரியாரும்
இறந்து பிறக்கத் தேவையில்லை!
பிறந்து இறந்த பயன் பெற்றார்!
காமத்தை திணிக்கும்
காட்டு மிராண்டிகளுக்கிடையே
காகிதப் பூவின் மென்மையும்;
கள்ளிப் பூவின் தன்மையும்;
ரோசாவின் அழகையும்
ரோமின் உறுதியும்,
கொண்ட உன்போல்
பெண்களால்தான்
புது யுகம் படைக்கிறோம் !
தமிழே; தமிழச்சியே!
நீ வாழ்க; வளர்க!                             

Oct 15, 2012

நவராத்திரி

நவராத்திரி 

நங்கையர்கள் நாவினிலே, 
நாமகளும் குடிகொண்டு, 
நவ நாள்கள் தேவிதனை ,
நாளெல்லாம் பூஜித்து; 

முதல் மூன்று நாட்களிலே 
மூவுலகைக் காப்பவளாம் 
துர்கையை வணங்கியே 
இச்சையைப் பெற்றிடுவர்!

அடுத்த மூன்று நாட்களிலே 
அரங்கனின் அருகிருக்கும் 
இலக்குமியை வணங்கி நாமே 
இன்பமெல்லாம் வேண்டிடுவர்!

கடைசி மூன்று நாட்களிலே 
காரிருளைப் போக்கிடுவாள் 
கலைமகளை வணங்கிடுவர்;
கற்ற கல்வி பெருகிடவே!

மனமாசு அகற்றிவிடும் 
மகிசாசுர மர்தினி சுலோகம் 
வேண்டுவன தந்திடுமே 
வெற்றிதனை உண்டாக்கும் 
லலிதா நவரத்னா மாலை 
இலட்சியத்தை அடைந்திடவே 
லலிதா சஹஸ்ரநாமம் மற்றும் 
லஹரியுடன்,அபிராமி அந்தாதி 
நித்தம் சொல்லி ஒரு மனதாய் 
நவராத்திரி நாட்களிலே 
நன்மையெல்லாம் பெற்றிடுவீர்!! 

மலைமகளும்; அலைமகளும் 
கலைமகளும் துணை நிற்பாள்;
துன்பமது வாராது;
இன்பமது நிலைத்திடுமே!!!

இனிய நவராத்திரி வாழ்த்துக்கள்!!!!!!!!!! - சுரேஜமீ 

(Wish you all a very HAAPY NAVARHTIRI!!!!)






Oct 11, 2012

ஆயுதத் தமிழ்!!!!!

அகத்தியன் வளர்த்த தமிழ்; 
அகிலம் பூத்த தமிழ்; 
அமுதம் படைக்கும் தமிழ்;
அறுசுவை உணர்த்தும் தமிழ்;
அகமும் புறமும் தமிழ்;
அழகு மொழியும் தமிழ்!

அவனியில் கற்றார்க்கு, 
அறிவைப் பெருக்கும் தமிழ்;
ஆற்றலை வகுக்கும் தமிழ்;
ஆன்றோர் மெச்சும் தமிழ் ;
இலக்கணம் பெற்ற தமிழ்;
இலக்கியச்  சோலை தமிழ்;
ஈடில்லா மொழி தமிழ்;
ஈகை போற்றும் தமிழ்;
உலகின் மூத்த தமிழ்;
உறவைப் பேணும் தமிழ்;
ஊடல் மொழியும் தமிழ்;
ஊட்டும் பணியும் தமிழ்;
எங்கும் எதிலும் தமிழ்;
எங்கள் வளமும் தமிழ்;
ஏட்டில்  பதித்த தமிழ்;
ஏற்றம் கண்ட தமிழ்;
ஐயம் அற்ற தமிழ்;
ஐம்புலன் அடக்கும் தமிழ்;
ஒற்றுமை வேண்டும் தமிழ்;
ஒளியை பரப்பும் தமிழ்;
ஓசையின் இனிமை தமிழ்;
ஓங்கியே ஒலிக்கும் தமிழ்;
ஔவை  நுகர்ந்த தமிழ்;
ஒளவையின் சிறந்த தமிழ்;
ஃ எனும் எழுத்தும் தமிழ்;

ஃ எனும் ஆயுதத் தமிழ்!!!!!!              - சுரேஜமீ

விநாயக சதுர்த்தி

கஜமுகனை நினை மனமே
தினம் தினம் குதூகலமே;
ஒருமுறை அவன் நாமம் சொன்னால்
உருவாகும் அற்புதமே!

நல்வினை நல்கிடுவான்
நாளும் அவன் அடிபணிந்தால்;
நாமகள் அருள்புரிவாள்
விநாயகன் துணை நின்றால்!

ஞானத்தைக் கொடுப்பவனை,
வரும் இடர் தவிர்ப்பவனை,
முப்பொழுதும் உணர்ந்தவனை,
முழுவதும் நம்பியவனை,
முன்னின்று காத்திடுவான்
முக்கண்ணன் புத்திரனே!

வேண்டுவது தந்திடுவான்
வேலவனின் சோதரனே
முக்கனியும்; மோதகமும்;
முப்பாலும் கொண்ட தமிழால்
அர்ச்சித்து மகிழ்வோரை
அருகிருந்து காப்பவனே!

தேய்பிறை சதுர்த்தியிலே,
சந்தி வரும் வேளையிலே,
பூஜிக்கும் அன்பருக்கே,
வேண்டுவன தந்திடுவான்!
மேன்மை பெறச் செய்திடுவான்;

சிந்தையிலே கணநாதன் 
மெல்ல வந்து அமர்ந்துவிட்டால்;
உள்ளமது தெளிந்திடுமே,
ஊக்கமது பிறந்திடுமே!!
சொல்ல ஒரு வார்த்தை ஏது?
சொக்கநாதன் மைந்தனே!

கஜமுகனை நினை மனமே
தினம் தினம் குதூகலமே;
ஒருமுறை அவன் நாமம் சொன்னால்
உருவாகும் அற்புதமே!                                                              - சுரேஜமீ 

(Sep 19, 2012 - Vinayaga Chathurthi)

Sep 5, 2012

இன்று ஆசிரியர் தினம்!

இன்று ஆசிரியர் தினம்!


'அ' வில் தொடங்கிய உறவு
அகிலமும் கற்றது உன் தொடர்பு!
ஏற்றிய ஏணி நீயல்லால்;
முற்றிலும் இல்லை இந்த வாழ்வு!
எந்தையும்; தாயும்;
எமக்கு உயிர்!
ஆசான் நீயோ 
எமக்கு சிந்தை 
எனும் நீர் வார்த்து
வளர்த்த பயிறன்ரோ
எம் அறிவு!
ஏது ஈடு உன் ஒப்பற்ற
சேவைக்கு?
நிலவு தண்ணொளியை
நிலத்திற்கு தந்தார்போல!
வான் மழையை
வனத்திற்கு வார்த்தார்போல்!
இவையெல்லாம் உனக்கு 
ஒப்பல்ல; ஆனால்
உன்னால் எனக்கு
அறிவூட்டப்பட்டவை;
ஆதலால் அதைவிட 
சிறந்தது உன் தொண்டே
என்று என் அறிவு 
சொன்னது!!

உன்னை நினைத்து
உன் தாழ் வணங்கி
உன்னைத் தொழுது
உதிக்கும் எந்நாளும்
பொன்நாளே!!

வாழ்க நீ என் அறிவுக்கடவுள்!             - சுரேஜமீ 

Jun 18, 2012

எங்கே செல்கிறது இந்தியா?

எங்கே செல்கிறது
இந்தியா?

மனிதமற்ற ஒரு
விலங்கு;
வீதியிலே
தன் காமப்பசிக்காக,
களியாடி இருக்கிறது
ஏழு வயதே நிரம்பிய
ஒரு அரும்பை;
பெங்களூருவில்!

மானுடம் செத்துவிட்ட
இந்த மண்ணிலே;
மதமும்; சாதியும்;
வறுமையும்;
மக்களின் குருதி குடிக்க;
காமப் பிராணிகளும்
களியாட்டம் போடுது காண்!

ஏ இரக்கமற்ற சமுதாயமே!
எங்கே உன் இதயம்?
இதயத்தை தொலைத்தவரெல்லாம்
இந்தியாவை நோக்கி 
வரும் வேளை;
எங்கே செல்கிறது
இந்தியா?                                                      - சுரேஜமீ  

The body of a seven-year-old girl, who was allegedly raped on Saturday night, was found in the Nellurhalli lake near Whitefield on the outskirts of the city on Sunday morning.
The police said that the girl had been raped allegedly by her father Basavaraju's acquaintance, Nagaraj, 28, a helper at a private workshop in Nellurhalli.
The victim's grieving mother, Mahadevi, said that the girl, a student of a government school, had gone to the Mariyamma temple near their house around 9 p.m. on Saturday after her dinner to collect the temple prasadam.
It was then that she met Nagaraj, who offered her biscuits and sweets, took her to a location near the lake and allegedly raped her.

Jun 14, 2012

யார் குடியரசுத் தலைவர்? (Who is the next President?)

ஒவ்வொரு இந்தியனும்
வெவ்வேறு இதழ்களையும்;
ஊடகங்களையும்;
உன்னிப்பாய் கவனிக்கிறான்!
ஆனால் சிந்தனைத் தெளிவில்லை,
யார் குடியரசுத் தலைவரென்று?

எவரும் அரியணையில்
அவதரிக்க அது என்ன
சித்திரக்கூடமா?
சிந்திக்கும் மாடமல்லவா!!
அரசியல் சதுரங்கத்தில்
காய்கள் நகரத் தொடங்கின....
விழிகளில்லாத வீணர்கள்
வழி செல்லும் எதுவும்,
மழையினில் காயவைத்த
மாவுக்கு ஒப்பாகும்!!!

யார் வேண்டும் என்று
பேர் கேட்டால் இந்தியன்
சட்டென சொல்லுவான்;

அரசியல் அற்றவன்;
அயலாரும் மெச்சுபவன்;
அகிலம் போற்றவே
ஆட்சிக்கு மாண்பு சேர்ப்பவன்;
சட்டம் தெரிந்தவன்;
சுற்றம் அறிந்தவன்;
சுயலாபம் அடையாதவன்;
சுளிவுகள் தெரிந்தவன்;
லட்சியக் கனவுடையோன்;
அலட்சியம் செய்யாதவன்;
எப்பொழுதும் இந்தியாவின்
ஏற்றத்தில் எண்ணத்தை;
சொல்லை; செயலை;
சிந்தாமல்; சிதறாமல்;
செப்பியது தவறாமல்;
செழுமையுடன் வழி நடத்தும்;
சிந்தனை ஒன்றுடையான்;
எந்தனை ஆளவேண்டும்;
எட்டு திக்கும் 
வாழவேண்டும்!

எவன் அவனோ;
அவன்தான் என்
தலைமகன்!!!
மெல்ல நகரட்டும்
நாட்கள்; 
நாமும் காத்திருப்போம்
இத்தகுதி உடையவர்
யாரென்று?                                           - சுரேஜமீ 

தமிழன் வீழாது இருக்க ஒரே வழி, தன் மொழி தாழாது இருக்க முனைவது தான்!

Jun 12, 2012

மணிமேகலை முருகேசன்


கூடல் நகரத்தின்
தேடல் தந்த
தங்கப் பெண்தான்
மணிமேகலை முருகேசன்
எனும் புதுமைப்பெண்!

கட்டுபாட்டுக்கு பெயர்போன
காவல்துறை அதிகாரியின்
அருந்தவப் புதல்வி
அன்னை இந்தியாவின்
பெருமை சாற்றும்
பேராற்றல் மிக்க
எளிமை உருவான
வலிமைப் பெண்!!

முதுகலை பட்டம் பெற்று
அயல்நாட்டுப் பணிக்கான
தேர்வில் முதல் முறையிலியே
வெற்றி பெற்று,
இந்தியாவின் முரசைப்
பறை சாற்றப்
புறப்பட்ட காரிகை!

ஐ.நா.தொடங்கி
அண்மையில் போருக்கு ஆளான
லிபியா வரையில்
ஆற்றிய சேவை
அளவில் அடங்கா!
ஆண்மகனும் தோற்றுவிடும்
போர்முனையில்
பார் போற்றும்,
பணியாற்றி இந்தியனின்
கண்ணீரைத் துடைத்த
தூரிகை!
தற்போது ரோமானிய;அல்பேனியா;
மற்றும் மோல்டோவா
நாட்டில் இந்தியாவின்
தூதுவர்!


இவர்தான் இந்த ஆண்டின்
பிரதமரின் ஆட்சிப்பணி 
விருதுக்காக அறுநூறு
போட்டியாளரில்
ஒருவராக தெரிந்தெடுக்கப் பட்ட
உயரிய பெண்மணி!
தமிழன் பெருமையை
தரணிக்கு பறை சாற்றும்
தலைமகள்!!

முட்டாசு கவிஞனின்
பட்டாசு வார்த்தைகளை
மொட்டாக அரும்பி
எட்டு திக்கும் மணம்
பரப்பும் ஏற்றமிகு
சிந்தையாள்!!!
சீரோடும்; சிறப்போடும்;
நாள்தோறும்
வாழ்ந்திடவே வாழ்த்திடுவோம்
வாருங்கள்!!!                                           - சுரேஜமீ

May 27, 2012

ரூபாயின் வீழ்ச்சி!

ரூபாயின் வீழ்ச்சி!

சராசரி இந்தியனின்
சிந்தையில் எழும் 
வினா இது!
ரூபாயின் மதிப்பு 
வீழ்ச்சி என்றால் 
என்ன?
 
 
ஒருரூபாய் கொடுத்து 
ஒரு பொருளை 
வாங்கும்பொழுது,
இன்று 
ஒரு ரூபாய் பத்து பைசா 
கொடுக்க நேர்ந்தால் 
அது தான் 
ரூபாயின் வீழ்ச்சி!
இதையே சற்று மாற்றிக் 
கூறினால், 
ரூபாயின் வாங்கும் 
சக்தி குறைகிறது  
என அர்த்தம்!

குப்பனும் சுப்பனும் 
தன் வீட்டு உணவுகளை 
தானே பயிரிட்டு 
தனக்கு மிஞ்சியதை 
சந்தைக்கு கொண்டு விற்று 
சந்ததிக்குச் சேர்த்ததுபோய்,

"சந்தைப் பொருளாதாரம் "
வந்த நாள் முதலாய் 
சந்திக்கு வந்ததுதான் 
சிந்திக்க வைத்த இந்த 
நாணயத்தின் வீழ்ச்சி!

எப்பொழுது நாம் 
தன்னிறைவு அடைந்து, 
மிஞ்சியதை, 
ஏற்றுமதிசெய்து, 
வேண்டியதை 
இறக்குமதி செய்யும்,
பண்டமாற்று பரிவர்த்தனையில்,
ஏற்றுமதி விஞ்சும்போழுதுதான் 
'சந்தை பொருளாதாரம்' 
சந்ததியைக் காக்கும் 
எனும் சாமானிய 
இந்தியனின் 
சராசரி கணக்கு கூட 
சர்க்காருக்கு தெரியவில்லை!

பெட்ரோல் டீஸல் தான் 
பேரிழப்பு வீழ்ச்சிக்கு 
என்று சொல்லும் 
அரசே,
பட்டினி சாவு கண்டு 
"பசுமைப் புரட்சிக்கு "
வித்திட்ட முன்னோர்கள் 
தொலைநோக்குப் 
பார்வை எங்கே?

"ஸ்வதேசியாய்"  இரு 
"விதேஷி" வேண்டாம் என்ற
விவேகப் பார்வையிலே 
வளர்ந்த இந்த 
"நாணயத்தை"
"நா" நயத்தால் 
மதி மயக்கி 
கூறு போட்ட 
அறிவிலிகாள்!

"விவசாய"ம் சார்ந்து 
வளர் தொழில்களை 
ஊக்குவித்து;
"உற்பத்தி"யைப் பெருக்கி,
ஊர் விட்டு ஊரு போகும் 
சரக்கினையே ஓரிடத்தில் 
கிடத்திடவே,
"கிட்டங்கு ஏற்படுத்தி "
தேவைக்கு போக மீதி 
ஏற்றுமதி செய்திடவே 
எளிதாய் வாயில் 
அமைத்தல்;
"மூலதனப் பொருள்களை 
முற்றிலுமாய் உற்பத்தி" 
செய்ய தேவையான 
அத்துனையும்
அளவில்லாமல் 
கிடைத்திடவே
வழி செய்தால்;
"நடப்பு கணக்கு" (Current Account)
என்றும் உபரியாகி (surplus)
அபரிமித வருவாயும் 
அமுதசுரபியாய் வருமே!
ஏற்றம்தனைத் தந்திடுமே,
மாற்றமது வந்திடுமே!!

புத்திசாலி என்று நாமே 
எத்திசையும் 
செல்லாமல் 
ஏர் பிடித்து உழுது, 
ஏற்றமது காண்போமே;

தொழிற்சாலை பல கண்டு 
"மூலதனப் பொருள்களெல்லாம் 
சாலச் சிறந்தது" எங்கள் 
நாட்டில் எனும் 
நாள் வருமேயானால்;

"ரூபாய்" 
அந்நியனையும் 
ஈர்க்கும்! 
அந்நாள் 
நம் மதிப்பெல்லாம் 
உயரும்;
விண்ணெட்டும் விலைவாசி 
மண்ணோடு மாண்டுபோகும்!

திக்கெட்டும் எங்கள் 
மதி கேட்டு ஓடி வரும் 
மானுட சாதிஎல்லாம்!

இந்தியனால் வந்தால் 
அது "வளர்ச்சி"
அன்னியனால் வந்தால் 
அது "வீழ்ச்சி"!
எது வேண்டும் நீ யோசி!
இல்லையேல் நாளும் யாசி!                                            - சுரேஜமீ!