Apr 30, 2015

அஞ்சலி - ஓவியர் கோபுலு


Apr 28, 2015

நம்பிக்கையாய் இருக்கிறேன்


Apr 23, 2015

என்ன நடக்கிறது?

என்ன நடக்குது எங்கள் நாட்டிலே
  எதிரரெதிர் வருபவனும் தாக்கவும் அவனவனை
ஏட்டினைப் படித்திடினும் எவனுக்கும் அறிவுமில்லை
  ஏகிட்ட கல்வியென்றும் எதுசரியெனவும் இல்லை
இருப்பவன் நம்பிடவும் மறுப்பவன் பரப்பிடவும்
  இருக்குது சுதந்திரமே இயம்பவும் செய்திடடா
கருத்தெதிர் கருத்தினையும் விதைத்திடு முடிந்தவரை
  கருத்தினில் கொள்பவரைக் கொண்டாடு அடிபற்றி

திணித்திட உனக்குமில்லை உரிமையும் துளியுமடா
  திண்பவன் உணர்வதில்தான் உணவின் அருமையடா
பழமையிலும் உண்டு நலன்விளை சேதிகளும்
  பண்பினை வளர்ப்பதற்கும் பேரினம் வாழ்வதற்கும்
சொல்வண்ணம் நடந்திட்டால் சேரினம் சேர்ந்திடுமே
  செந்தமிழ் நடைபழகி சிந்தனைச் சிறகேறி
வம்பினை வளர்ப்பதென்றும் நற்றமிழர் மறபன்று
  வள்ளுவம் வழிவந்த வான்புகழ் தமிழினத்தில்

வேண்டாம் சாதியென வேண்டுவ உரைத்திட்டும்
  வீணில் வளர்த்ததுவும் வெறியர்கள் செயலன்றோ
பேதங்கள் பார்ப்பதுவும் வேதங்கள் செய்ததென்றால்
  ஓதவும் மறுத்திருந்தால் ஒற்றுமை நிலைத்திருக்கும்
வானமும் வையகமும் அனைவர்க்கும் சமமென்றால்
  வானவர் மட்டுமிதை எப்படி மறுத்திடுவார்?
நாயனார் கதைபடித்தும் நாயகன் அறியாமல்
  நானிலம் சண்டையிட்டால் நாமும் அழிந்திடுவோம்

நம்பிக்கை கொள்வதுவும் நம்மை உயர்த்திடவே
  நமக்குள் பிரிவறுத்து நாளும் மகிழ்ந்திடவே
அவரவர் நம்பிக்கை அவரவர் தனிவிருப்பம்
  அடுத்தவன் மறுப்பதற்கு அவனென்ன ஆண்டவனா?
அழிப்பது எனவந்தால் இயற்கையும் ஆண்டவனே
  அடக்கிடு சீற்றங்களை அவரவர் மட்டினிலே
அறிவினைப் பயிர்செய்ய ஆற்றலும் பெருக்கிடலாம்
  அகிலமும் அறுவடையாய் போற்றியே வாழ்ந்திடலாம்

அரசியல் மதங்கடந்து சாதியும் வேரறுத்து
  அறிந்திடு சரியெதென்று ஆவன செய்வதற்கு
எவனும் தலைவனென்று ஏகிட மறுத்துவிடு
  அவனவன் குடும்பத்தை ஏற்றுதல் நீயுங்கண்டு
அன்பைக் காட்டிடவே உனக்கவன் தலைவனென்றால்
  அன்பாய் உனைநம்பி வந்தவர் என்செய்வார்?
அனுதினம் யோசித்து வாழ்க்கையை உயர்த்திவிடு
  ஆனந்தமாய் வாழ்ந்து அனைவரும் இன்புறவே!   

 - சுரேஜமீ

இன்று உலக புத்தக தினமாமே? - ஏப்ரல் 23

புத்தகம் 
புகும் அகம்
புக நன்கே
பூவிதழ் விரிய

அகம் 
புறம் நோக்கி
அறம் நிலைத்தல்
நிலை அறிவன்றோ?

பொதி அல்ல
புத்தகம்
நிறை மதிதரும்
குறை அகற்றி!

வாசித்தலை
சுவாசிக்க
உள்நுழைக் காற்றும்
உனதாக்கும் அறிவு!

நிறம் 
மொழி
இனம்
மதம் தாண்டும்

மாண்புடை
பண்பிருந்தால்
மானுடம்
வென்றிடும்!

புத்தகம்
புது அகம்
அதன் முகம்
அகம் தகும்!

அதற்கொரு தினம்
அன்றாடம் அதன் தினம்
அவனியின் ஆணிவேர்
அதுதான் புத்தகம்!

போற்றுவோம்
புத்தகம்!
படைப்போம்
புது யுகம்!!

படி
படி படியாய்
படியேறு வாழ்க்கை
பலர் மகிழ வாழ!!

அன்புடன்
சுரேஜமீ
Image result for book images

Apr 22, 2015

உலக பூமி தி(த)னம் - ஏப்ரல் 22

என் பிழை என்ன?




மண்ணில் சொர்க்கமாக
மானுடம் வாழ்வதற்கு
தன்னை அளித்தேன்
தான் அறிவாரோ?

ஓடும் நதிகளும்
தேடும் இரைகளும்
வருடும் தென்றலும்
வனப்பும் மிகுதியாய்

மண்ணும்; பொன்னும்
பொருளும்; போகமும்
வளர்நிறைக் காடும்
வான்மழை பொழிவும்

வாரி வழங்கினேன்;
வாழ்க்கை சுகத்திற்கு!
வேண்டுவன கொடுத்து
வேதனை அடைகின்றேன்!

என்ன சொல்ல?

இனியும் பிறப்பேனா?
இன்னல் தொலைப்பேனா?
என்னவெலாம் செய்தென்னை
ஈட்டி கொண்டு பிளக்கின்றார்?

காடெல்லாம் 
கலைத்து
மேடென்றும்
பள்ளமென்றும்

அவரவர் தரம் பிரிந்து
ஆலைகளும் 
சாலைகளும் 
அமைக்கின்றார்!

காணிகள்
கலைத்து
கட்டிடங்கள் 
கட்டுகின்றார்!

வெட்டி வெட்டி
வேறறுத்து
நானிலத்தை
நஞ்சாக்கி

அணுவென்றும்
ஆய்வென்றும்
தக்க தக்கத்
தாதுவென்றும்

சுட்டுச் சுட்டு
சூடேற்றி
சூழ்நிலையக்
சூன்யமாக்கி

சுகப்படத்
துடிக்கின்ற
மானுடமே!
நானும் உன் அம்மாதான்!

யான் செய்த 
பிழையென்ன?

நீ செய்யும்
பிழைக்கெல்லாம்
பழிபொறுத்த
காரணத்தால்

வரும் நாளில்
மூச்சுக்கும்
காற்றின்றி
தவிப்பிற்கும்
நீரின்றி
பிரளயத்தில்
மூழ்கிடுவோம்

உன்னால் நானும்
என்னால் நீயும்!

விழித்துவிடு
இப்பொழுதே
இனி வாழும்
வாழ்க்கைக்கு!

என்னை வாழ விடு!
ஏற்ற நல்ல வாழ்வு தர!!

அன்புடன்
சுரேஜமீ


Apr 21, 2015

புரட்சிக்கவி பாரதிதாசன் நினைவு நாள் (ஏப்ரல் -21)




பார 'தீ' எனும் சுடர்
பற்றிய தீதான்
பாரதி தாசன்
பைந்தமிழ் நேசன்!

எட்டயபுரம் 
எட்டிப் பார்த்தது
என்னையும் பாட
எண்ணும் ஒருவனா என்று!

தமிழ் கொஞ்சியது
தன்னிகரற்ற 
தனயனின்
தகைசார் எழுத்தில்!

எது சுவை
என்போர்க்கு
கேள்வியைக்
கேட்டான்!

கனியா?
கரும்பின் சாறா?
தேனா?
தீம்பாகா?
பாலா?
தென்னை இளநீரா?

இவைதரும்
சுவை மிகும்
எவை தரும்
என் தமிழ் 

நிகரென்றான்!

அது மட்டுமா?

அமுதத் தமிழ்தான்
ஆருயிர் என்றான்!
வாழ்வும் தமிழ்;
வளமும் தமிழ் என்றான்!

இன்று நினையேல்
என்று நினைப்பது?
நன்று சொல்வேன்
நல்ல தமிழர்க்கு

நயமுடன் படிக்க
நாயகன்
பாரதிதாசன் 
நூலை!

- சுரேஜமீ

Apr 20, 2015

ஆயுதம் கொல்!
அன்பின் வலியதோர் ஆயுதம் ஏதுண்டு?
ஆற்றல் பெருகிநல் போற்றல் தழைக்கும்;
இன்பம் இதுவன்றோ ஞாலம் உயிர்பெறவே
ஆதலின் ஆயுதம் கொல்!

வாழ்வு சிறக்க!
சிகைதொடு வர்ணமும் சேர்ந்திட மாலையும்
கூர்நிறை வாளொடு ஆயுதம் ஏந்தினோம்;
மண்ணில் கொடுமைகள் நீங்கியென்றும் -மாதரும்
பேணிட வாழ்வு சிறந்து!
- சுரேஜமீ

படக்கவிதை
மானுடம் வாழ
மாண்புடன் நாளும்
மாலைகள் தரித்து
மஞ்சளும் ஏகி
ஆயுதம் ஏந்தி
ஆண்டவன் வேண்டி
ஆகமம் பேணி
ஆதலைச் செய்து
நாட்டினில் ஊறும்
கேட்டினைத் தடுக்க
பூட்டினை உடைத்து
ஏட்டினை மாற்ற
நாங்களும் வந்தோம்
நான்மறை போற்றும்
நன்மகள் பாடி
நன்மைகள் பெறவே!
சாதி எமக்கில்லை; இது
சந்ததிப் பழக்கம்!
சாத்திரம் பேணி
சமத்துவம் பற்ற
போனவர் தொற்றி
வருபவர் காக்க
வாள்கொண்டு ஏற்கும்
வல்லமைப் பண்பே
வேறொன்றுமில்லை;
வீணே வதந்தியைத்
தடுத்து எங்கள்
தர்மத்தைக் காப்பீர்!
மதமென்னும் வழியும்
மண்சார்ந்த வழியே
மதமில்லை எமக்கு
மண்ணின் மாதரும் நாமே!
அன்புடன்
சுரேஜமீ


உன்னை அறிந்தால் - வரும் தலைமுறைக்கான வாழ்வியல் வழிகாட்டி!

நம் கல்விமுறையில் மாற்றம் வேண்டுமென்பது, பெரும்பான்மையினரின் கருத்தாக, இற்றை நாட்களில் இருக்கிறது. இதற்குப் பின்னனி என்ன என்று யோசித்தால், வாழ்வியல் சார்ந்த கல்வியாக, தற்போதைய கல்வி இல்லை என்பதும், ஒரு தேர்விற்காகத் தன்னைத் தகுதிப் படுத்திக் கொள்ளும் மனனம் சார்ந்த ஒரு புத்தக அறிவை மட்டுமே தருகிறது என்பதும், குற்றச்சாட்டாக இருக்கிறது.

கல்வி என்பது சிந்தனை ஆற்றலை, பகுத்து உணரும் அறிவை, சூழலுக்கு ஏற்ப முடிவு எடுக்கும் தன்மையை, வாழ்க்கை நெறியை உய்விக்கும் கோட்பாடுகளை,

ஒவ்வொரு தனி மனிதனுக்கும் கொடுக்க வேண்டும் என்பதில் கருத்து வேறுபாடு கிடையாது! 
ஆனால், நாம் படித்ததை, நம் வாழ்க்கைக்குப் பயன்படுத்தி, நம்மைச் செதுக்கினோமா? என்றால், அதற்கான விடையைத் தேடும் சமுதாயமாக, வளரும் சமுதாயம், இருப்பதுதான் வேதனையாக இருக்கிறது!

ஒரு பழமொழி நாம் அனைவரும் அறிந்ததே.

'ஐந்தில் வளையாதது; ஐம்பதில் வளையாது! என்பது;

ஆகவே தான், நல்ல பல கருத்துக்களை, மிகவும் சுருக்கமாக, குழந்தைகளுக்கு, ஆரம்பக் கல்வியில் வைத்தார்கள்! ஆனால், அதன் ஆழத்தைப் பெற்றோர்கள் உணர்த்தினார்களா?
என்பதில் தான், கல்வியின் மேம்பாடு இருக்கிறது!
இன்றைக்கு ஆங்கில வழிக் கல்விதான், உலகத்திலேயே சிறந்தது என்ற நினைப்புதான், ஆதாரக் கல்வியான தாய்மொழிக் கல்வியின் சிறப்பைக் கெடுக்கிறது.

ஆங்கிலம் என்பது ஒரு அன்னிய மொழி அறிவு! அவ்வளவே! அது சூழலால் ஏற்படுவது. மொழி அறிவு என்பது, ஒரு புரிதல் சாதனம்! அதுவே, அறிவின் உச்சமாகிவிடாது!

தாய்மொழிக் கல்விதான் தரத்தின் அடையாளம்!

அதற்கேற்ப, தமிழ்க் கிழவி ஔவையாரின் சில பாடல்களும், அதன் கருத்துக்களும், வளரும் சமுதாயத்திற்காகப் பகிர்வதில் பெருமிதம் கொள்கிறேன்!

கல்வியின் சிறப்பு என்ன? ஏன் படிக்க வேண்டும்? படித்தால் தான் வாழ முடியுமா? என்ற கேள்விகளுக்கு, ஔவையார் என்ன சொல்கிறார் என்று சிந்தியுங்கள்!

மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்றஇடம் எல்லாம் சிறப்பு!

இதைவிடப் பிஞ்சு உள்ளங்களில், கல்வியின் சிறப்பைச் செம்மையாகச் சொல்ல இயலுமா? ஆகக், குழந்தைகள் சிந்திக்க வேண்டுவது, நாம் ஒரு தேசத்தில் மட்டுமே இருக்க வேண்டுமா? அல்லது, மன்னனினும் உயர்வாகக் கற்றவராக இருந்தால், சென்ற இடமெல்லாம் சிறப்புப் பெறமுடியும்!

இன்றைக்கு மக்களாட்சியில், ஆட்சி பீடத்தில் இருப்பவர்களும் பல தேசம் போகலாம்; ஆனால், கற்றவரின் துணையில்லையேல், ஆட்சியாளருக்கே அவலமாகிவிடும்!
ஆதலால், கல்வியின் சிறப்பு எத்தகையது என்பதை அறிய, இதைவிட உதாரணம் வேறில்லை!

அடுத்து, நாம் யாரோடு நம்மைத் தொடர்பு படுத்திக் கொள்ளல் அவசியம் என்பதை மிக அழகாகச் சொல்லியிருக்கிறார் அடுத்த இரண்டு பாடல்களில்!

நல்லாரைக் காண்பதுவும் நன்றே; நலமிக்க
நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே!

அப்படி, நல்லவர்களோடு நட்பு கொள்ளும்போது, நமக்கு என்ன கிடைக்கும்?

இந்தப் பாடகைக் கவனியுங்கள்!

நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல்லுலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை!

நாம் கழனியிலே நெல்லுக்குத்தான் நீர் பாய்ச்சுகிறோம்; ஆனால், அது புல்லுக்கும் போகிறதல்லவா? அதுபோல, இந்த உலகம் உய்வதற்குத் துணையாக இருப்பவர்கள் நல்லவர்கள். ஆதலால், அவர்களுடைய நட்பு அவசியம் என்பதை, அவர்களால்தான் அனைவருக்கும் பயன் விளைகிறதென்பதை, மழையோடு ஒப்பிட்டுச் சொல்கிறார்.

அடுத்து உறவு எப்படி இருக்க வேண்டும்?

இன்றைக்கு அவசியமானது நல்ல உறவுகள், நமக்குத் துணையாக இருப்பதுதான். நமக்குக் கிடைத்த உறவுகள், நம் பிள்ளைகளுக்கு வாய்ப்பதில்லை. அதற்குக் காரணம், நாம் கூட்டுக் குடும்பங்களில் வாழ்ந்ததும், நம் உடன் பிறந்தோர் ஒன்றுக்கு மேல் என்பதும்!!

ஆனால், இன்றைக்கு இருக்கக்கூடிய சூழலில், பொருளாதார ஏற்ற, இறக்கங்களில், தனிக்குடித்தன வாழ்வும், பெரும்பாலான இல்லங்களில் உறுப்பினர்கள் குறைவு என்பதும் கண்கூடு. ஆக, உறவு முறைகள் அவ்வளவாக பலமாக இருப்பது இல்லை என்பதும், அதன் அவசியத்தை இன்னும் பலப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

இவர் கூற்றுப்படி ஒரு உறவு உங்களுக்குக் கிடைத்தால், நிச்சயம், நீங்கள் கொடுத்து வைத்தவரே!

அற்ற குளத்தில் அறும்நீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வர் உறவல்லர் - அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறுவார் உறவு!

நீர்ப் பறவைகள் எப்படி நீர் வற்றியவுடன், அடுத்த நீர் நிலையைத் தேடி ஓடுகிறதோ, அவ்வாறில்லாமல், நீர்த்தாவரங்கள், நீரோடு சேர்ந்து தானும் மடிவதுபோல,

உறவுகள் நம் துன்பத்திலும் தோள் கொடுக்கக் கூடிய உறவுகளாகப் பெற்றவர்கள் வாழ்க்கை சொர்க்கத்திற்கு ஒப்பானது!

இன்னும் எவ்வளவோ சான்றுகளை, நீதிகளை அடுக்கலாம். ஆனால், நாம் எந்த அளவு ஒரு நூலைத் தனதாக்கி, அதனை நாம் சிந்தையில் ஏகி, அதன் பயனை, வளரும் சமுதாயத்திற்கு ஏற்ற வகையில், எடுத்து இயம்புவோமேயானால்,

ஒரு உறுதியான சமுதாயத்தை, உலகுக்கே வழிகாட்டும் சமுதாயத்தை, உன்னத நெறி போற்றும் சமுதாயத்தை, நம்மால் உருவாக்க முடியும்!

செய்வோமா?

அன்புடன்
சுரேஜமீ
உன்னை அறிந்தால் - வரும் தலைமுறைக்கான வாழ்வியல் வழிகாட்டி!

எதைக் கொண்டு வந்தோம்?  வாழ்க்கையில் நாம் துய்ப்பதும்; எய்துவதும், ஏகுவதும், பெற்றதும், பெறுவதும் அனைத்தும், இடையில் வந்தவையே!  

அதற்கும் மேலாக இவையெல்லாம், நம்மை விட்டுச் செல்பவையோ அல்லது நாம் விடுத்துச் செல்பவையோதான்!

நாம் செய்ய வேண்டுவன எல்லாம், இந்த உண்மையைச் சரியாக வளரும் தலைமுறைக்குப் புரிய வைப்பதுதான்!  

எப்படி?

தென்னாட்டு சார்லி சாப்ளின், நாஞ்சில் தந்த முத்து, நகைச்சுவையால் நல்ல தமிழில் நம்மை சிந்திக்க வைத்த மனிதர், 

இருந்து கொடுப்பதல்ல வள்ளல் தன்மை; இல்லாதும் கொடுப்பதே எனும் வாழ்க்கைக்குச் சொந்தக் காரர், அவர் தான் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்கள்!  

அவர் ஒரு முறை ஒரு விழாவில் பங்கெடுத்து, சிறுசேமிப்புத் திட்டம் பற்றிப் பேசுகிறார்.  அவ்விழாவில், சுதந்திர இந்தியாவின் முதல் நிதி அமைச்சரும், பொருளாதார நிபுணருமான, ஆர்.கே. சண்முகம் செட்டியார் அவர்கள் தலைமையேற்றிருக்க, என்.எஸ். கே ஒரு கதை மூலம் நமக்கு எது தேவை என்பதை விளக்குகிறார்!

அந்தக் கதை உங்களுக்காக.....

ஒரு உணவு மற்றும் தங்கும் விடுதிக்கு வரும் பயனாளி, 100 ரூபாயைக் காசாளரிடம் கொடுத்து, தான் விடுதியை விட்டுச் செல்லும்போது திரும்பப் பெற்றுக்கொள்வதாகக் கூறுகிறார்.  

அந்த சமயத்தில், காசாளரிடம் பாக்கி வசூலிக்க மளிகைக் கடைக்காரர் வருகிறார்.  உடனே, அந்தப் பணத்தை மளிகைக் கடைக்காரருக்கு கொடுக்கிறார் காசாளர்.

மளிகைக் கடைக்காரர், சிகிச்சைக்காக மருத்துவரிடம் செல்கிறார்.  ஆக, அந்தப் பணம் தற்போது மருத்துவரின் கைக்கு வந்துவிட்டது.

அடுத்த நாள் மருத்துவர், ஒரு விருந்தோம்பலுக்காக, உணவு மற்றும் தங்கும் விடுதிக்குத் தரவேண்டிய பாக்கிக்காக, 

காசாளரிடம் அந்த 100 ரூபாயைக் கொடுக்கிறார்.

அன்று மாலை, விடுதியிலிருந்து காலி செய்து புறப்படும் பயனாளி வருகிறார்.  தான் கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடுத்துவிட்டு, தான் கொடுத்த அந்த 100 ரூபாயைப் பெற்றுக் கொள்கிறார்.

பெற்றுக் கொண்ட பயனாளி, காசாளரிடம் என்ன கூறுகிறார் என்பதே, நாம் கற்றுக் கொடுக்க வேண்டிய பாடம் என்று சொன்னால் மிகையாகாது!

பயனாளி கூற்று - இது ஒரு செல்லாத நோட்டுசெலவாணி ஆகிறதா என்று பார்க்கத்தான் உன்னிடம் தந்தேன் என்று!

கூறியதோடு மட்டுமல்ல; அந்த 100 ரூபாயை, காசாளரின் கண்ணெதிரே கிழித்தும் போட்டு விட்டார்!

கலைவாணர் அவர்கள் இந்தக் கதையைக் கூறிவிட்டு,

இதில் யாருக்கு நட்டம்? எனும் கேள்வியையும் எழுப்பினார்!  

இதற்கு தலைவராக இருந்த சண்முகம் செட்டியார், இதுதான் செல்லாத நோட்டாயிற்றே; ஆதலால், யாருக்கும் நட்டமில்லை என்கிறார்!

அப்படியானால், காசாளர், மளிகைக் கடைக்காரர், மருத்துவர் என பலருடைய கடன்கள் இதன் மூலம் அடைபட்டிருக்கிறதே என்கிறார் கலைவாணர்!

அதற்குச் செட்டியார் தந்த பதில் என்ன தெரியுமா? இதற்குப் பெயர்தான் 'நாணயம்' என்பது!  ஒரு பொருள் மீது வைக்கப்படும் மதிப்பு!  ஒரு மனிதன் மீது இருக்கும் நம்பிக்கை! 

ஆக, நாம் கையாளும் காகிதத்திற்கே அவ்வளவு மதிப்பு என்றால், அதை உருவாக்கும் மனிதர்களுக்கு எவ்வளவு மதிப்பு என்பதை நாம் அறிந்தோமா?  

உயிர்கள் துச்சமாக அல்லவா மதிக்கப்படுகின்றன?  

மீண்டும் தொடங்கிய இடத்திற்கே செல்வோம்! எதைக் கொண்டு வந்தோம், நாம் இழப்பதற்கு!  இருப்பதைப் பகிர்ந்து, இன்பமாய் வாழ, நாம் கற்றுக் கொடுத்தால்

வரும் சமுதாயம் வாழ்வில் ஒளி பெறும்!   

ஒரு பதிவாக ஆரம்பித்தது, ஒரு தொடராக ஆகிவிட்டது!  தொடர்வோம் சிந்தனையை!!

சிகரத்தை நோக்கி!

அன்புடன்
சுரேஜமீ

Inline image 1Inline image 2

Apr 18, 2015

கவிஞனால்தான் முடியும்! 
காலத்தால் அழிக்க முடியாத கருத்தைச் சொல்வதற்கு!

இந்திய மண்ணின் இரண்டு இதிகாசங்கள் சொல்லும் நீதி, வாழ்க்கை இயம்பட வாழ வழிசொல்லும் ஒப்பற்ற காவியங்கள் என்பது யாவரும் அறிந்ததே!
அதை சொல்லும் விதத்தில், எவ்வகையிலும் சளித்தவர்கள் அல்ல நம் கவிஞர்கள்! 
அதிலும் குறிப்பாக, கவிச் சக்ரவர்த்தி கம்பன், அயோத்தியா காண்டத்தில், மந்திரப் படலத்தில், ஒரு வாழ்த்துப் பா வைக்கிறான்.
அந்த விருத்தத்தில், கடைசி நான்கு வரிகளில், ஒரு காதையின் முழுக்கருத்தையும் சொல்லி விடுகிறான் என்பதை, 
என்னுடைய கோணத்தில் பார்க்க விரும்புகிறேன்.

இதோ அந்த பாடல் வரிகள்:
.......கூனும் சிறிய கோத் தாயும்
கொடுமை இழைப்பக் கோல் துறந்து,
கானும் கடலும் கடந்து, இமையோர்
இடுக்கண் தீர்த்த கழல் வேந்தை!

என்ன சொல்கிறான் கம்பன்? சிந்திப்போமா?

கூனியும், இராமனின் சிறிய தாயான கைகேயியும், செய்த கொடுமையின் விளைவால், அரசாள வேண்டிய இராமன், பட்டத்தைத் துறந்து, கானகம் ஏகிக், கயவர்களின் சூழ்ச்சியால், கட்டின மனைவி சீதையைப் பிரிந்து, ஆற்றொனாத் துன்பத்திற்கு ஆளாகி, அனுமனின் உதவியால், கடல் கடந்து, தன் இமைபோல இருக்கக் கூடிய மனைவி சீதாப்பிராட்டியை துன்பத்திலிருந்து மீட்க, இழிசெயல் புரிந்த இராவணனை அழித்து, வெற்றியை ஈட்டித் தன் மனைவியை மீட்ட வேந்தன் இராமன் என்று

இரத்தினச் சுருக்கமாக, ஈரிரண்டு வரிகளில் யாரால் சொல்ல முடியும்?

கவிஞனால்தான் முடியும்! காலத்தால் அழிக்க முடியாத கருத்தைச் சொல்வதற்கு!

அன்புடன்
சுரேஜமீ

Inline image 1

Apr 17, 2015

உன்னை அறிந்தால் - வரும் தலைமுறைக்கான வாழ்வியல் வழிகாட்டி!

அன்றாடம் நாம் பார்க்கும் செய்திகள் ஏராளம்.  அனுபவங்கள் தாராளம். ஆனாலும் ஏனோ நம் எண்ணங்கள் நம்மைச் சுற்றியே இருக்கின்ற ஒரு சமுதாய மாற்றத்தைக் கடந்த முப்பது ஆண்டுகள் நமக்குத் தந்திருக்கிறது என்பதை யாரும் மறுக்க இயலாது.  

இந்த சமூக மாற்றம், நம் வாழ்வியல் சிந்தனைகளை, வாழ்க்கை நெறிகளை, வளர்ப்பு முறைகளை மாற்றியிருக்கிறது என்றுதான் எண்ணத் தோன்றுகிறது!

முதல் பத்து வயதில்,  என்ன விதைகளை நம் குழந்தைகளுக்கு வித்திடுகிறோமோ, அதுதான் அவர்களுக்கு ஒரு நல்ல அடித்தளத்தைத் தரும் என்பது வாழ்வியல் கண்கூடு!  

இதைப் பற்றிக் கவிஞர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்ற வரிசையில், இன்று நம் சிந்தைக்கு விருந்தளிப்பது, 

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அவர்கள்!

உடன் என் நினைவுக்கு வரும் முதல் பாடல், என் தந்தை எங்களுக்குப் பாடிய தாலாட்டுப் பாடல்!  

இதோ உங்களுக்காக.....

உன்னைக் கண்டு நானாட
என்னைக் கண்டு நீயாட
உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி....

எனும் பாடல்தான்! அதில் வரும் வரிகளைக் கவனியுங்கள்.  ஒரு தாய், தன் சேயிடம் என்ன எதிர்நோக்குகிறாள்? 

எண்ணத்தில் உனக்காக இடம் நான் தருவேன்;
எனக்கு இனி நீ என்னென்ன தருவாய்?

வல்லமை சேர நல்லவனாக,
வளர்ந்தாலே போதுமடா வளர்ந்தாலே போதுமடா!

ஆங்கிலத்தில், ஒரு பழக்கம் உங்களுக்கு வரவேண்டுமென்றால், ஒரு சொல்லைத் திரும்பத் திரும்பச் சொல்லச் சொல்லி, அதைப் பழக்கமாக்கும் ஒரு உத்தியைச் சொல்லுவார்கள்! (Auto Suggetion).  இது நம் கலாச்சாரத்தோடு ஒன்றியதுதான்.  ஒன்றும் புதிதல்ல என்றாலும், நம் அந்நிய மோகம், என்றும் அடுத்தவன் என்ன சொல்லியிருக்கிறான் என்பதில்தான் மூழ்கும்!  

சற்று யோசியுங்கள்!  இப்படி ஒரு தாலாட்டை, தமிழை, வாக்கியங்களைக் கேட்ட, ஒவ்வொரு குழந்தையும், மண்ணில் சாதனையாளர்களே!  

அடுத்து என்ன சொல்கிறார் என்று கவனியுங்கள்!

தூங்காதே தம்பி தூங்காதே எனும் பாடலில், 

போர் படை தனில் தூங்கியவன் வெற்றி இழந்தான்;
உயர் பள்ளியில் தூங்கியவன் கல்வி இழந்தான்!

என்று தூக்கத்தின் தாக்கத்தைச் சொல்கிறார்.  ஒருவன் எண்ணிய, எண்ணியாங்கு எய்த நினைத்தால், முதலில் செய்ய வேண்டுவது, ஓய்வற்ற உழைப்பே!

என்பதை வலியுறுத்தும் ஒப்பற்ற பாடலைத் திரும்ப, திரும்பக் கேட்டால், அது வாழ்க்கைக்கு வழி சொல்லும் என்பதுதான் இப்பாடல் தரும் பாடம்!

இது மட்டுமா?

தவறு செய்யாத மனிதன் இவ்வுலகில் யாருளர்?  ஒருவன் தவறே செய்யவில்லையெனில், அவன் எதையுமே செய்யத் தொடங்கவில்லை என்றுதான் பொருள்.  ஆக, தவறு என்பது நம்மை நல்வழியில் இட்டுச் செல்லும் ஒரு வாய்ப்பு என்று கருத வேண்டும். 

அதற்குக் கவிஞர் என்ன சொல்கிறார் தெரியுமா?

சிந்தித்துப் பார்த்து செய்கையை மாத்து 
சிறுசா இருக்கையில் திருத்திக்கோ- தவறு
சிறுசா இருக்கையில் திருத்திக்கோ!

தெரிஞ்சும் தெரியாமே நடந்திருந்தா அது 
திரும்பவும் வராம பாத்துக்கோ!

இதைவிட எளிதாகக் குழந்தைகளுக்குச் சொல்ல முடியுமா?

இவர்களெல்லாம் நம் முன்னோர்கள் என்று அறியும் எந்த மனிதனும், நிச்சயம் ஒரு உயரத்தை எட்டுவான் என்று சொன்னால், மறுப்போரும் உளரோ?

இன்னும் ஒன்றைச் சொல்லி இன்றைய வழிகாட்டிப் பதிவை நிறைவு செய்ய விரும்புகிறேன்.

தன்மானம் இல்லாத ஒருவன், மனிதனாக இருக்கத் தகுதியற்றவனாகிறான்.  தன்மானம்தான் ஒருவனுக்கு அவன் மீது ஏற்படுகின்ற மரியாதையை உயர்த்தி அவனை உயர்ந்த இடத்திற்கு அழைத்துச் செல்கிறது.  

அதற்கு என்ன வேண்டும் எனக் கவிஞர் சொல்கிறார் எனத் தெரிந்துகொள்ளுங்கள்!

நாளும் ஒவ்வொரு பாடம் கூறும் காலம் தரும் பயிற்சி - உன்
நரம்போடு தான் பின்னி வளரணும் தன்மான உணர்ச்சி!

மனிதனாக வாழ்ந்திட வேணும் மனதில் வையடா - தம்பி மனதில் வையடா!

வளர்ந்து வரும் உலகத்துக்கே நீ வலது கையடா - நீ வலது கையடா!

மேற்கூறிய இதைவிடத் தன்னம்பிக்கை தரும் கூற்றுக்களை, எளிய வடிவில் எந்த மொழியும் கொடுக்க இயலாது!  

ஒரு கவிஞன் மட்டுமல்ல; தமிழ் தந்த அனைத்துக் கவிஞனுமே, ஒரு மனிதனை, மகத்தான மனிதனாக உருவாக்கக் கூடிய தனிப்பெரும் திறன் பெற்றவர்கள் என்றால், 

நம்முடைய கடமை என்ன என நாம் ஒவ்வொருவரும் யோசிக்க வேண்டும்.

ஒவ்வொரு பெற்றோரும், தங்கள் குழந்தைகளுக்கு நல்ல கருத்துக்களைத் திரட்டி,  

ஒரு கதையாக, கவிதையாக, பாடலாக, பாடமாக, வாழ்வில் ஊட்டவேண்டும் என்பதே இப்பதிவின் சாராம்சம்!