சலாம் போடும் அடிமைகளை,
சமூக அவலங்களை,
பெண்ணியம் எதிர்க்கும் கோழைகளை,
பண்பாட்டைக் குலைக்கும் சதிகளை,
ஏய்த்துப் பிழைக்கும் வர்க்கங்களை,
ஏகாதிபத்திய அரசுகளை,
சுட்டெரிக்கும் நெருப்பு
சுழலும் சூறாவளி
பாயும் காட்டாறு
பணியா மாவீரன்
எழுத்தால் போராடும்
ஏவுகணை இவன்!!
இவன் பிறந்தது
இம்மண்ணின் தவமன்று
மானுடம் பெற்ற வரம்!
ஏனெனில், மனிதன் மட்டும்தான்
இயற்க்கைக்கு போட்டியாக
இணைப்புக்கு அடங்காத
எல்லாம் என்னால்தான்
என மார்தட்டும் பேதையாக
போதையில் இருப்பவன்!
சிந்தையைத் தெளிவிக்க
சிங்கமாய் வந்தவன்தான்
எட்டயபுரம் தந்த
பாட்டுடைத் தலைவனவன்!
தமிழெனும் வாள் கொண்டு
தரணியில் போர் தொடுக்கும்
தகைச்சார்ப் புலவனவன்!
தன்னிகரில்லை என என்றும்
மண்ணில் புழுகுகின்ற
மாந்தருக்கிடையே தான்
மானமிகு பாரதியும்
வாழ்ந்தான் எனும்போது
வாழ்க்கையே இலட்சியமாகிறது!
இந்நூற்றாண்டில்,
இவன் போல் எவர் வாழ்ந்தார்?
இவன் போல் எவர் மடிந்தார்?
வரலாறு கேட்கிறது...
வாய்மூடி நிற்கிறது தமிழ்....
நேற்றைய நன்னாளில்
நயமிகு புகழ் பாடிய
அத்துணை உள்ளங்களுக்கும்
அடியேனின் வந்தனங்கள்!!
இதுபோல் என்றென்றும்
அவன் புகழ் பாடிடுவோம்
அவனியில் மானுடம்
அழியாப் புகழ் எய்திடவே....
No comments:
Post a Comment