Apr 17, 2015

உன்னை அறிந்தால் - வரும் தலைமுறைக்கான வாழ்வியல் வழிகாட்டி!

அன்றாடம் நாம் பார்க்கும் செய்திகள் ஏராளம்.  அனுபவங்கள் தாராளம். ஆனாலும் ஏனோ நம் எண்ணங்கள் நம்மைச் சுற்றியே இருக்கின்ற ஒரு சமுதாய மாற்றத்தைக் கடந்த முப்பது ஆண்டுகள் நமக்குத் தந்திருக்கிறது என்பதை யாரும் மறுக்க இயலாது.  

இந்த சமூக மாற்றம், நம் வாழ்வியல் சிந்தனைகளை, வாழ்க்கை நெறிகளை, வளர்ப்பு முறைகளை மாற்றியிருக்கிறது என்றுதான் எண்ணத் தோன்றுகிறது!

முதல் பத்து வயதில்,  என்ன விதைகளை நம் குழந்தைகளுக்கு வித்திடுகிறோமோ, அதுதான் அவர்களுக்கு ஒரு நல்ல அடித்தளத்தைத் தரும் என்பது வாழ்வியல் கண்கூடு!  

இதைப் பற்றிக் கவிஞர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்ற வரிசையில், இன்று நம் சிந்தைக்கு விருந்தளிப்பது, 

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அவர்கள்!

உடன் என் நினைவுக்கு வரும் முதல் பாடல், என் தந்தை எங்களுக்குப் பாடிய தாலாட்டுப் பாடல்!  

இதோ உங்களுக்காக.....

உன்னைக் கண்டு நானாட
என்னைக் கண்டு நீயாட
உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி....

எனும் பாடல்தான்! அதில் வரும் வரிகளைக் கவனியுங்கள்.  ஒரு தாய், தன் சேயிடம் என்ன எதிர்நோக்குகிறாள்? 

எண்ணத்தில் உனக்காக இடம் நான் தருவேன்;
எனக்கு இனி நீ என்னென்ன தருவாய்?

வல்லமை சேர நல்லவனாக,
வளர்ந்தாலே போதுமடா வளர்ந்தாலே போதுமடா!

ஆங்கிலத்தில், ஒரு பழக்கம் உங்களுக்கு வரவேண்டுமென்றால், ஒரு சொல்லைத் திரும்பத் திரும்பச் சொல்லச் சொல்லி, அதைப் பழக்கமாக்கும் ஒரு உத்தியைச் சொல்லுவார்கள்! (Auto Suggetion).  இது நம் கலாச்சாரத்தோடு ஒன்றியதுதான்.  ஒன்றும் புதிதல்ல என்றாலும், நம் அந்நிய மோகம், என்றும் அடுத்தவன் என்ன சொல்லியிருக்கிறான் என்பதில்தான் மூழ்கும்!  

சற்று யோசியுங்கள்!  இப்படி ஒரு தாலாட்டை, தமிழை, வாக்கியங்களைக் கேட்ட, ஒவ்வொரு குழந்தையும், மண்ணில் சாதனையாளர்களே!  

அடுத்து என்ன சொல்கிறார் என்று கவனியுங்கள்!

தூங்காதே தம்பி தூங்காதே எனும் பாடலில், 

போர் படை தனில் தூங்கியவன் வெற்றி இழந்தான்;
உயர் பள்ளியில் தூங்கியவன் கல்வி இழந்தான்!

என்று தூக்கத்தின் தாக்கத்தைச் சொல்கிறார்.  ஒருவன் எண்ணிய, எண்ணியாங்கு எய்த நினைத்தால், முதலில் செய்ய வேண்டுவது, ஓய்வற்ற உழைப்பே!

என்பதை வலியுறுத்தும் ஒப்பற்ற பாடலைத் திரும்ப, திரும்பக் கேட்டால், அது வாழ்க்கைக்கு வழி சொல்லும் என்பதுதான் இப்பாடல் தரும் பாடம்!

இது மட்டுமா?

தவறு செய்யாத மனிதன் இவ்வுலகில் யாருளர்?  ஒருவன் தவறே செய்யவில்லையெனில், அவன் எதையுமே செய்யத் தொடங்கவில்லை என்றுதான் பொருள்.  ஆக, தவறு என்பது நம்மை நல்வழியில் இட்டுச் செல்லும் ஒரு வாய்ப்பு என்று கருத வேண்டும். 

அதற்குக் கவிஞர் என்ன சொல்கிறார் தெரியுமா?

சிந்தித்துப் பார்த்து செய்கையை மாத்து 
சிறுசா இருக்கையில் திருத்திக்கோ- தவறு
சிறுசா இருக்கையில் திருத்திக்கோ!

தெரிஞ்சும் தெரியாமே நடந்திருந்தா அது 
திரும்பவும் வராம பாத்துக்கோ!

இதைவிட எளிதாகக் குழந்தைகளுக்குச் சொல்ல முடியுமா?

இவர்களெல்லாம் நம் முன்னோர்கள் என்று அறியும் எந்த மனிதனும், நிச்சயம் ஒரு உயரத்தை எட்டுவான் என்று சொன்னால், மறுப்போரும் உளரோ?

இன்னும் ஒன்றைச் சொல்லி இன்றைய வழிகாட்டிப் பதிவை நிறைவு செய்ய விரும்புகிறேன்.

தன்மானம் இல்லாத ஒருவன், மனிதனாக இருக்கத் தகுதியற்றவனாகிறான்.  தன்மானம்தான் ஒருவனுக்கு அவன் மீது ஏற்படுகின்ற மரியாதையை உயர்த்தி அவனை உயர்ந்த இடத்திற்கு அழைத்துச் செல்கிறது.  

அதற்கு என்ன வேண்டும் எனக் கவிஞர் சொல்கிறார் எனத் தெரிந்துகொள்ளுங்கள்!

நாளும் ஒவ்வொரு பாடம் கூறும் காலம் தரும் பயிற்சி - உன்
நரம்போடு தான் பின்னி வளரணும் தன்மான உணர்ச்சி!

மனிதனாக வாழ்ந்திட வேணும் மனதில் வையடா - தம்பி மனதில் வையடா!

வளர்ந்து வரும் உலகத்துக்கே நீ வலது கையடா - நீ வலது கையடா!

மேற்கூறிய இதைவிடத் தன்னம்பிக்கை தரும் கூற்றுக்களை, எளிய வடிவில் எந்த மொழியும் கொடுக்க இயலாது!  

ஒரு கவிஞன் மட்டுமல்ல; தமிழ் தந்த அனைத்துக் கவிஞனுமே, ஒரு மனிதனை, மகத்தான மனிதனாக உருவாக்கக் கூடிய தனிப்பெரும் திறன் பெற்றவர்கள் என்றால், 

நம்முடைய கடமை என்ன என நாம் ஒவ்வொருவரும் யோசிக்க வேண்டும்.

ஒவ்வொரு பெற்றோரும், தங்கள் குழந்தைகளுக்கு நல்ல கருத்துக்களைத் திரட்டி,  

ஒரு கதையாக, கவிதையாக, பாடலாக, பாடமாக, வாழ்வில் ஊட்டவேண்டும் என்பதே இப்பதிவின் சாராம்சம்!

No comments:

Post a Comment