Apr 7, 2015



தமிழே நீ தான் சாட்சி!

காடும் மேடும்                        
கழனி வயலும்
செழுமை போற்றி
வாழ்ந்த காலமெங்கே?

வானம் பார்த்த 
வையம் இதுதான்
வளமை இல்லா
வாழும் காலமிங்கே!

களிறைக் கட்டி
கலநெல் அடித்து
களிப்பாய்க் கூடி
வாழ்ந்த காலமெங்கே?

கையால் அடித்து
வரும்நெல் சேர்த்து
வயிறு வளர்க்க
வாழும் காலமிங்கே!

இறங்கி நடந்தால்
இதயம் நிறைந்த
பசுமை போற்ற
வாழ்ந்த காலமெங்கே?

இதயம் நொறுங்க
இறுகும் மண்ணும்
கருகும் செடியாய்
வாழும் காலமிங்கே!

வளமை நிறைந்து
புலமை  போற்றி
ஈதல் பண்பாய்
வாழ்ந்த காலமெங்கே?

வறுமைப் பிடியில்
மாவும் மக்களும்
தன்னைக் காக்க
வாழும் காலமிங்கே!!

ஆறும் நீரும்
தோப்பும்; மரமும்
குளமும் கண்டு
வாழ்ந்த காலமெங்கே?

கானல் நீரும்
கட்டிட செங்கலும்
ஆழ் குழாய் நீருமாய்
வாழும் காலமிங்கே!!

கழனிகள் பெருகி
கட்டிடம் சுருங்கி
கண்மாய் தேங்கி
கண்கவர் வனப்பும்
காண்பவர் அணைப்பும்
காணும் நாள் மீண்டும்
வருமா?

தமிழே நீ தான் சாட்சி!

1 comment:

  1. //களிறைக் கட்டி
    கலநெல் அடித்து
    களிப்பாய்க் கூடி
    வாழ்ந்த காலமெங்கே?
    கையால் அடித்து
    வரும்நெல் சேர்த்து
    வயிறு வளர்க்க
    வாழும் காலமிங்கே! எனும் திரு. சுரேஜமீயின் அக்கால இக்கால ஒப்பீட்டு வரிகள்…//- அன்புச் சகோதரி மேகலா இராமமூர்த்தி, வல்லமை மின்னிதழ்

    ReplyDelete