Apr 16, 2015

காண்போர் களிப்பதற்கு குரலெனும் மொழியெதற்கு?

சார்லி சாப்ளின்

சார்ந்தோரின் மகிழ்வுக்கு
சாப்ளின் என்று, 
சொன்னால் போதும் 
சலிப்பே பறந்துவிடும்!

நவரசமும் இருந்தாலும்
நகைச்சுவைதான் பிரதானம்
நானிலத்தில் எவரும்
நாளெல்லாம் மகிழ!

வாழ்க்கை வாட்டத்தில்
வீழ்வோர் பலரிருக்க
வாழ்வே சாதனையாய்
வாழ்ந்தவர்தான் சாப்ளின்!

எத்தனையோ
சொல்வதற்கு
ஏறிவரும்
சிந்தையிலே....

ஐந்தில் ஆரம்பம்
அகிலம் ஒரங்கம்
காண்போர் களிப்பதற்கு
குரலெனும் மொழியெதற்கு?

மூன்றே வருடத்தில்
மூவிரண்டு நூறிலிருந்து
மில்லியனும் கைக்குவர
மிடுக்கான உழைப்புமது!

பாட்டாளி வியர்வையையும்
பாதகர்கள் போக்கினையும்
பாங்குடனே சித்தரித்து
பார்ப்பதற்குத் தந்தானே!

அமெரிக்கா துரத்தியது;
ஆஸ்காரும் அணைத்ததுவே!
ஆங்கிவன் இல்லையெனில்;
ஆறுதலும் யாருளரோ?

நகைச்சுவையும்
நாயகனும்
நாடு தாண்டி 
நமை நாட

கமலின் வடிவத்தில்
கண்டோமே
சாப்ளினை
சிகரம் தந்த புன்னகையில்!

இந்நாளில் அவன்
பிறந்தான்;
வரும் நாளும்
அவன் நினைவு!
ஆண்டொன்று போனாலும்
ஆசையுடன் காத்திருப்போம்!!

(சார்லி சாப்ளின் பிறந்தநாள் - 16/04/2015)

அன்புடன்
சுரேஜமீ

No comments:

Post a Comment