Nov 6, 2012

விநாயகர் கவசம்

சதுர்த்தியில் மலர்ந்த
சண்முக சோதரா
சதுர்மறை போற்றும்
சிவனுமை  பாலா
தினம்உனைப் பாடி
துதிசெய்து நாளும்
உனதருள் வேண்டி
நிதமுனைப் பணிவோம்.

முன்வினை களைவாய்
மூஷிக வாகனா
என்மனம் இருப்பாய்
ஈசன் புதல்வா
சிந்தையில் கலப்பாய்
சித்தி விநாயகா
உன்பதம் சரணம்
உமையவள் மைந்தா.

ஒன்றுமே அறியேன்
உலகினில் பிறந்தேன்
உன்னடி சேர்ந்தேன்
ஒரு வரம் தருவாய்
நன்று மற்றன்று
நவிலா வண்ணம்
நந்தன விநாயகா
நலமது அருள்வாய்.

இருசெவி என்றும்
இன்பமே உய்க்கும்
நற்செய்தி நாளும்
நயம்படக் கேட்க
இருவிழி காணும்
ஒரு முகக்காட்சி
மங்கல மூர்த்தி
நினதருள் சாட்சி.

நாமகள் நாவினில்
அமர்ந்து அடியேன்
சொல்பொருள் யாவும்
நலமென விளைய
நுகரும் மணமே
நறுமணமாகி,என்
மெய்யது காப்பாய்
கஜமுக கணபதி.

ஐம்புலன் தன்னை
ஐங்கரன் காப்பான்
தினம் ஒருதடவை
மனமது ஒன்றிப்
பாடும் பக்தர்கள்
பாரினில் நற்கதி
பெறுவார் சத்தியம்
பால கணபதியருளால்.

அல்லல்கள் ஓடும்
நல்லவை நாடும்
நவகோள் அருளை
வாரி வழங்கும்
ஒருமுறை உன்னைத்
தொழும்அன்பர் யாவர்க்கும்
ஹேரம்ப கணபதி
அருள்நமைக் காக்கும்!                        -சுரேஜமீ 

No comments:

Post a Comment