Nov 26, 2012

சுவாமியே.....சரணமையப்பா!

ஐயப்பா என்று சொல்லு மனமே
ஐயன் வந்து காத்திடுவான் தினமே
சரணகோஷம் பாடிடுவாய் மனமே
சட்டெனவே வந்திடுவான் தினமே

கார்த்திகையில் மாலையிடு மனமே
காலை மாலை பூஜையிடு தினமே
காரிருளும் போய்விடுமே மனமே
காரியத்தை முடித்து வைப்பான் தினமே

இருமுடியைக் கட்டிடுவோம் மனமே
மறுமுனையில் அவனிருப்பான் தினமே
புறப்படுவோம் சரணம் சொல்லி மனமே
புண்ணியங்கள் சேர்த்திடுவோம் தினமே

பக்தர்களை நாடி வரான் மனமே
பாயும் புலியேறி வரான் தினமே
பம்பையிலே நீந்தி வரான் மனமே
பாதையினைக் காட்ட வரான் தினமே

அழுதாமலை ஏறிவிடு மனமே
அல்லல்களும் தொலைந்திடுமே தினமே
கரிமலையைத் தாண்டிவிடு மனமே
கவலைகளும் பறந்திடுமே தினமே

பதினெட்டு படியேறு மனமே
பதினாறும் பெற்று வாழு தினமே
படிபூஜை செய்திட்டால் மனமே
பாவமெல்லாம் பனியாகும் தினமே

ஐயனைக் கண்டுவிட்டால் மனமே
அகமெல்லாம் மலர்ந்திடுமே தினமே
அபிஷேகம் செய்துவிட்டால் மனமே
ஐயனருள் துணை நிற்கும் தினமே

ஐயப்பா என்று சொல்லு மனமே
ஐயன் வந்து காத்திடுவான் தினமே
சரணகோஷம் பாடிடுவாய் மனமே
சந்ததிகளைக் காத்திடுவான் தினமே

No comments:

Post a Comment